tamilnadu

img

தலித் இளம்பெண் மர்மச் சாவு

உரிய விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

காஞ்சிபுரம், நவ. 28- காஞ்சிபுரம் அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகள் ரோஜா (19). இவர் கடந்த 21 ஆம் தேதியிலிருந்து காணவில்லை.  பல இடங்களிலும் அவர் தேடி கிடைக்காததைத் தொடர்ந்து 23 ஆம் தேதி பெற்றோர் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் தனது மகளைக் காணவில்லை என புகார் செய்துள்ளனர். மேலும் காரை கிராமத்தைச் சேர்ந்த  ராஜேஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளது என்றும் காவல்துறையினரிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜேஷிடம் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அப்போது ரோஜாவை காவல்நிலையத்திற்கு அழைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 27 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் ரோஜா தூக்கிட்ட நிலையில்  சடலமாக கண்டறியப்பட்டார். பின்னர் காவல்துறையினர் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராஜேஷ்  ரோஜாவை அழைத்துச்சென்று பிறகு விட்டு விட்டதாக அவரின் உறவினருக்கு ராஜேஷ் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

ரோஜாவின் உடலில் தீக்காயங்கள் இருப்பதால், அவரை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்திருக்கலாம்  தந்தை பூபதி  காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கே.நேரு, எம்.ஆறுமுகம், இ.லாரன்ஸ், இ.சங்கர்,விசிக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ரோஜாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், காணவில்லை என்று புகார் செய்த அன்றே ரோஜாவை தேடி யிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். காவல்துறையின் அலட்சியத்தால் தான் இப்படி நிகழ்ந்துள்ளது எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜேஷை தாலுகா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘காவல்துறையில் புகார் அளித்தபோதே விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இப்பெண் கொலையை தடுத்திருக்க முடியும். இளம்பெண் மரணத்திற்கு காரணமான அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்’ என  சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.