ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுக: விவசாயிகள் கோரிக்கை
கடலூர், மே 11-தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்த பெருமாள் ஏரி பாசன பகுதிக்குழு விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடி அருகிலுள்ள பூவாணிக்குப்பத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், இணைச்செயலர் ஆர்.கே.சரவணன், சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் பகுதிக்குழுவின் தலைவராக என்.ஆர்.ரமேஷ், செயலாளராக எம்.ரவிச்சந்திரன், பொருளாளராக சக்கரபாணி மற்றும் 17 பேர் கொண்ட பகுதிக்குழு தேர்வு செய்யப்பட்டது.கூட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் பெருமாள் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி என்எல்சியின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலமாக தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும்.ஏரியின் 11 கிளை வாய்க்கால்கள் அனைத்தையும் முழுமையாக தூர்வாரவேண்டும். பூவாணிக்குப்பம்-சம்பாரெட்டிப்பாளையம் வாய்க்காலை உடனே சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவைசாகுபடிக்கு என்எல்சியின் உபரி நீரை வழங்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பச்சைக்கிளிகள் வளர்த்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்: வனத்துறை
புதுச்சேரி, மே 11-வன விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து பறவைகளை பிடிப்பதும் விற்பதுமாக உள்ளனர்.புதுச்சேரி வில்லியனூர்கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட மூர்த்தி நகர் மற்றும் கூடப்பாக்கம் பகுதியில் கொக்கு மற்றும் பச்சைக்கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரி தியாகராஜன், உதவியாளர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.வனத்துறையினர் வருவதை அறிந்து கொண்ட பறவை விற்பனையாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.அதேசமயம் வனத்துறையினர் அங்கு அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 25 கொக்குகள், 25 பச்சைக்கிளிகளை பறிமுதல் செய்தனர்.இது குறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது:வீடுகளில் கிளிகள் வளர்ப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. யாரேனும் புகார் அளித்தால் வளர்ப்பவர்களிடம் இருந்து கிளிகள் பறிமுதல் செய்யப்படும். மேலும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதமும் வசூலிக்கப்படும். விற்பனை செய்பவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.