tamilnadu

img

ரயில்வே இருப்பு பாதை தடுப்புகளை அகற்ற வேண்டும்:

சென்னை, செப். 2- சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்கள் சுமார்  50 ஆயிரம் பேர் விம்கோ ரயில் நிலையம் அருகில் உள்ள  இருப்பு பாதையை கடந்து தான் திருவொற்றியூர் நெடுஞ் சாலைக்கும், மெட்ரோ ரயிலுக்கு செல்ல வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பாதையை,  திடீரென ரயில்வே நிர்வாகம் அடைத்து விட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு 4ஆவது வார்டு மன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் இது குறித்து கூறுகையில், “விம்கோ ரயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரத்திற்கு இடையில் மேம்பாலம் கிடையாது. 1ஆவது பிளாட்பாரத்தில் இறங்கும் மக்கள் ரயில்வே இருப்பு பாதையை கடந்து தான் மேற்கு மற்றும் கிழக்கு பகுதி களுக்கு செல்ல முடியும்.  ராமநாதபுரம் மக்கள், இறந்தவரின் உடலை இந்த பாதை வழியாகத்தான் சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். தற்போது, ரயில்வே நிர்வாகம் இந்த வழியை முழுமை யாக அடைத்து விட்டது. அந்த மக்களுக்கு மாற்று பாதையும் இல்லை. இதனால்  திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வசிக்கும் ராமநாதபுரம், ஜோதிநகர், முருகப்பா நகர், ஜெய் ஹிந்த் நகர், டி.எஸ். கோபால் நகர், டி.கே.எஸ். நகர், சண்முகபுரம், பொன்னி யம்மன் நகர், சத்தியமூர்த்தி நகர், டி.கே.பி. நகர், விபி நகர், அம்பேத்கர் நகர்,  சரஸ்வதி நகர், சக்தி கணபதி நகர், கலைஞர் நகர், காந்தி நகர், ராதாகிருஷ்ணன் நகர் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.எனவே சுரங்கப்பாதை பணி முடியும் வரை, ஏற்கெனவே அடைத்து வைத்திருக்கும் தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் ரயில் நிலையத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிக்கு தடையின்றி சென்று வர நடவடிக்கை  எடுக்க வேண்டும்”என்றார். இந்த சந்திப்பின்போது ராமநாதபுரம் கிராம தலைவர் காமராஜர், சிபிஎம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் கதிர்வேல், நிர்வாகி கள் அலமேலு, வெங்கடய்யா, குமார் ஆகியோர் உடனி ருந்தனர்.