tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா 98வது பிறந்த நாள் - மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா தனது 98வது பிறந்தநாளை திங்களன்று (ஜூலை 15) கொண்டாடினார்.

குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கட்சித் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் நேரில் வந்து சங்கரய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு சிறப்பு அழைப்பாளர் கே.வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், எஸ்.நூர்முகமது, ஏ.லாசர், என்.குணசேகரன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய என்.சங்கரய்யா, ”இந்திய சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உள்ள பிரதானமான இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி. இடதுசாரி, ஐக்கிய முன்னணி வளர்வதற்கான உறுதிமொழியை மத்தியக்குழு அளித்துள்ளது. பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதுபோல பிரம்மாண்டமான கட்சியாக நமது கட்சி வளரும். அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

”நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை படித்தேன். அனைத்து அம்சங்களும் கொண்டதாக, வல்லமைமிக்க ஒரு அறிக்கை தயாரிக்கக்கூடிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. அதனை நிறைவேற கட்சி சகல துறைகளிலும் வளர வேண்டும். அதனை மாநிலத் தலைமை செய்ய வேண்டும்” என்றார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, டி.ரவீந்திரன், க.பீம்ராவ், சி.கல்யாணசுந்தரம், ஏ. ஆறுமுக நயினார், க.உதயகுமார், எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் (தென்சென்னை), இ.சங்கர் (காஞ்சிபுரம்), பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் தெ.லட்சுமணன், எஸ்.நம்புராஜன், டிசம்பர் 3 இயக்கத் தலைவர் தீபக், பத்திரிகையாளர் அ.குமரேசன், குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் எஸ்.சந்தானம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்க என்.சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.