tamilnadu

img

கொரோனா வைரஸ் : வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணம் வழங்குக... தடுப்பு- கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துக!

சென்னை:
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை  பலப்படுத்த வேண்டும். வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக் கின்றன. இன்றைய சூழ்நிலையில் கொரோனாபாதிப்பு தமிழகத்தில் குறைவாக இருந்த போதிலும் முறையான சோதனைகள் மேற்கொள் ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் நோய்பரவுதல் அதிகமாகி மோசமான விளைவுகளைஉருவாக்கி விடும் என தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது. 

எனவே இதனை கணக்கில் கொண்டு அடுத்த சில நாட்களில் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும்பலப்படுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட துறைகள் மட்டுமன்றி திறமையும், அர்ப்பணிப்பும் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து தொடர்கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை நோய் பரவுதல் அதிகமானால் அதை எதிர்கொள்வதற்கான முறையிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ரூ. 50 ஆயிரம் கோடி ஒதுக்கி நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக!
கேரள அரசு கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க முதல் தவணையாக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கி பல்வேறு சிறப்புத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதுபோலதமிழக அரசும் கொரோனா சிகிச்சை மற்றும்பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடியை முதல் கட்டமாக ஒதுக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்கான வசதிகளை வலுப்படுத்த வேண்டும்.கிராமப்புறங்களில் நடமாடும் மருத்துவமனைகளை அனுப்பி முதல்கட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.நகர்ப்புறங்களில் மட்டுமன்றி கிராமப்புறங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் இத்தகைய பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.மாநிலத்திற்கு உள்ளே நுழைகிற அனைத்துவழிகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  பாராட்டுகிறது.  இப்பணியில் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கும் உரிய பரிசோதனைகள், உபகரணங்கள், உடைகள்மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற் கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதுதான் நோய் பரவலை தடுப்பதற்கான முக்கியமான  நடவடிக்கை என சுகாதார நிறுவனங்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றன. இதனால் அன்றாடம் தங்கள் வாழ்க்கை தேவைகளுக்காக உழைப்போர் வாழ வழியற்ற நிலைமை ஏற்பட்டு விடும். பசியா? நோயா? என்கிற கேள்வி வரும்போது நோய் வந்தால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் பசியைப் போக்குவோம் என மக்கள் தங்கள்அன்றாட தேவைக்காக பணிகளுக்கு செல்லும்
நிலைமை ஏற்படும்.

ரேசன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கிடுக
இதை தடுக்கும்விதமாக அனைவருக்கும் கேரள அரசாங்கம் செய்திருப்பதைப் போலஇரண்டு மாதங்களுக்கான உணவு பொருட் களை பொதுவிநியோக முறையில் முன்கூட் டியே வீடுகளுக்கு சென்று நேரில் வழங்க வேண்டும்.அன்றாட செலவுகளுக்கு தேவையான பணஉதவியையும் வழங்க வேண்டும்.மின் கட்டணம், குடி நீர் கட்டண வசூலைஇரண்டு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்.முதியோர் உள்ளிட்டு வழங்கப்படும் உதவித் தொகையினை இரண்டு மாதங்களுக்கு சேர்த்து முன்கூட்டியே வழங்க வேண்டும்.இதேபோன்று ஆட்டோ, டாக்சி சாலையோர வியாபாரிகள், தலைச்சுமை வியாபாரிகள், சிறுகடை நடத்துவோர் என சமூகத்தின்கீழ்மட்டத்திலுள்ள அனைத்து பகுதியினருக் கும் இந்த உதவிகளை செய்ய வேண்டும்.கடைகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரிவோர், கிராமப்புற வேலை உறுதிச்சட்டத்தில் பதிவு செய்தோர் ஆகியோருக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் செலவுகளுக்கான தொகையை வழங்க வேண்டும்.உற்பத்தியை நிறுத்தியுள்ள நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளத்தை முன் கூட்டியே வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசு உத்தரவாதம் செய்திட வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள துப்புரவுத்தொழிலாளர்களுக்கு முகக் கவசம் மற்றும் கையுறை எதுவும் வழங்கப்படாமல் பணிபுரிந்து வருகின்றனர். இது ஆபத்தானது. எனவே, துப்புரவுத்தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.

வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ. 5000 வழங்கிடுக!
தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

அதேபோல சிறு-குறு தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், நுண்நிதி நிறுவனங்கள் வங்கியில் வாங்கியுள்ள கடன்கள் கட்டுவதற்கு ஒரு வருடம் விலக்களிக்க வேண்டும்.

உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கிடுக
மத்திய அரசின் சார்பாக நேற்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் வரும் 22 ஆம் தேதி அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு முக்கியமானது. அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
அதேசமயம் இந்த பாதிப்பை எதிர்கொள்வதற்கும் மீண்டு வருவதற்குமான எந்த பொருளாதார உதவிகளையும் மத்திய அரசு நேரடியாகவோ, அல்லது மாநில அரசுகளின் மூலமாக செய்வதற்கான உத்தேசத்தையோ தெரிவிக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

கடுமையான நிதி நெருக்கடியில் மாநில அரசுகள் சிக்கியுள்ள நிலையிலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய மானியங்கள் மற்றும் உதவிகளை முழுமையாக கொடுக்காத நிலையிலும்,  மாநிலங்களுக்கு உரிய நிதிஉதவியை உடனடியாக செய்ய வேண்டும்.

அதே போல மத்திய உணவு கிடங்குகளில் உள்ள தானியங்களை உடனடியாக மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

அனைத்து பொது இடங்களிலும், பேருந்துநிறுத்தங்களிலும் கைகளை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் மத்திய, மாநில, அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;