tamilnadu

img

மூன்று மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனாலும், 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.சென்னையில் கடந்த 20 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சென்னைக்கு அடுத்ததாக கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இந்த இரு மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு 200-க்கும் மேல் உள்ளது. அது 300-ஐ நெருங்கி வருகிறது. கடந்த 20 ஆம் தேதி புள்ளி விவரப்படி சென்னையில் 996 பேர் செங்கல்பட்டு 283 பேர், திருவள்ளூரில் 207 பேர் பாதிக்கப்பட்டனர்.இது படிப்படியாக உயர்ந்து சென்னையில் 1,193 பேராக அதிகரித்துள்ளது. செங் கல்பட்டில் 277 பேர், திருவள்ளூரில் 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரத்தில் பாதிப்பு 200-க்கும் குறைவாக இருந்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள இந்த 2 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும், காய்ச்சல் முகாம் மூலம் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக கண்டறியவும், கண் காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் குறைந்து வந்த தொற்று தற்போது அதிகரித்து வருவதால், மாநகராட்சி அதிகாரிகள் மேலும் கண்காணிப் பினை தீவிரப்படுத்தியுள்ளனர்.அண்ணாநகர், கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது தவிர 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரையில் 3,128 பேர் உயிர் இழந்தனர்.சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டத்தில் மட்டும் 4,504 பேர் இந்நோய்க்கு பலியாகினர். தமிழகம் முழுவதும் வெள்ளியன்று 72 பேரும், சென்னையில் மட்டும் 18 பேரும் உயிர் இழந்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால், தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வெளியே வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பெரும்பாலானவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.வாகனத்தில் செல்பவர்களும் வெளியில் நடமாடுபவர்களும் முகக் கவசம் அணியாமல் அஜாக்கிரதையாக சுற்றி திரிகிறார்கள். சமூக இடைவெளி, கிருமி நாசினியை கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் இவற்றின் மூலம் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்தாலும் கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.மேலும், பேருந்து பயணத்திலும் மக்கள் முகக் கவசம் அணியாமல் பயணம் செய்வதை காண முடிகிறது. இதனால் இந்நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

;