தாம்பரம், செப்.12- தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் அன்னை வேளாங்கண்ணி பெறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வியாழனன்று (செப் 12) மாலை வகுப்புகள் முடிந்த பின்னர், தேனாம்பேட்டை மார்க்கமாக செல்லும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து சென்றது. பேருந்தை நாகப்பன் (52) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்நிலையில், பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் மேம்பாலம் வழியாக தாம்பரம் நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்பக்கத்தில் ரேடியேட்டரில் இருந்து புகை வந்துள்ளது. எனவே நாகப்பன் பேருந்தை சாலையோரம் நிறுத்தி யுள்ளார். அப்போது திடீரென பேருந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் உடனே பேருந்திலிருந்து கீழே இறங்கினர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தினால் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் மார்கமாக ஜி.எஸ்.டி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.