மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு ஒன்றிய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒன்றிய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரி 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசிடமிருந்து ஒரு முன்மொழிவு பெறப்பட்டது. அது மொழியியல் நிபுணர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டு நீண்ட காலமாகவே பரிசீலனையில் இருந்தது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தேர்தல் களத்தில் ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்துவந்த நிலையில் ஒன்றிய அரசு மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.