tamilnadu

img

சி.ஐ.எஸ்.சி.இ. தேர்வு முடிவு வெளியீடு

சி.ஐ.எஸ்.சி.இ. யின் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிட்டப்பட்ட நிலையில், 275 மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக, சி.ஐ.எஸ்.இ, எனப்படும் இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் கீழ் இந்த ஆண்டு நடக்க விருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு கொள்கை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சி.ஐ.எஸ்.சி.இ. யின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி, 10 ஆம் வகுப்புத் தேர்வை 2 லட்சத்து 19 ஆயிரத்து 499 பேர் எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், மதிப்பெண் கணக்கிடப்பட்டதில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 454 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் 45 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை.

இதேபோல், 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுத இருந்த 94 ஆயிரத்து 11 பேரில், 93 ஆயிரத்து 781 பேர் தேர்ச்சி பெற்று, அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வில் 230 மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 2 தேர்வுகளிலும் சேர்த்து 275 மாணவ, மாணவிகள் தோல்வியடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சி.ஐ.எஸ்.சி., யின் தலைமை நிர்வாகியும், பொதுச் செயலருமான ஜெர்சி அராத்தூன் கூறியதாவது.  இந்த தேர்வில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவியர் என இருதரப்பினரும் 99.98 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் 99.86 சதவீதமும், மாணவியர் 99.66 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களின் கூட்டுத்தொகையில் பிழை இருக்கும்பட்சத்தில், அதைச் சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

;