tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் திருக்குறள் பேச்சு,  ஓவியப் போட்டி
சென்னை, ஜூன் 21- சிறிராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரிடையே திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியினை நடத்த இருக்கிறது. இப்போட்டிகள், 10 மையங்களில் நடத்தப்படும். சென்னையில், ஜூலை 27 அன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள சிறீராம் சிட்ஸ் கிளைகளிளோ அல்லது சிறீராம் சிட்ஸ், எண்: 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி: 044 – 4021 4100 என்ற முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வந்து சேர வேண்டிய கடைசி நாள் , ஜூலை 20 ஆகும்.

தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு 
சென்னை, ஜூன் 21- மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்ட தொழில் நகரியத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அவுரிக் பசுமை தொழிற்பேட்டையில் முதலீடு செய்ய முன்வருமாறு தமிழகத்தை சேர்ந்த சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த தொழில்நகர விளக்க கூட்டத்தில் பேசிய அவுரங்காபாத்தொழில்நகரிய நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கைலாஷ் ஜாதவ், அவுரங்காபாத் தொழில் நகரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் கஜானன் பாட்டில் ஆகியோர் இந்த அழைப்பை விடுத்தனர். ஆட்டோமொபைல்தொழில், உதிரிபாகங்கள், விண்வெளி, பாதுகாப்பு, தகவல்தொழில்நுட்பம், உணவுத்தொழில் மற்றும் இவை சார்ந்த துணைத் தொழில்களை இலக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மகாராஷ்டிர மாநில அரசால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அவுரிக் நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆவடி அருகே ரூ.28 கோடியில் புதிய படகு குழாம் திறப்பு 
சென்னை, ஜூன் 21- சென்னையை அடுத்த ஆவடி அருகே ரூ.28 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள படகு குழாமை முதல்வர் பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் வெள்ளியன்று ( ஜூன் 21) திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன் ரூ.28.16 கோடி மதிப்பில் பசுமை பூங்கா, பொது மக்கள் நடைபயிற்சி வசதி, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், சிற்றுண்டி கட்டடம், படகுகள் மூலம் ஏரியின் அழகை கண்டுகளிக்க படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புணரமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.