tamilnadu

சென்னை, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

ஸ்டேட் வங்கியில் கிளார்க் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இலவச வழிகாட்டும் கருத்தரங்கம்
சென்னை, பிப். 5- பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி, எம்பவர் அறக்கட்டளை, மற்றும் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம் இணைந்து ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணிக்கான தேர்வு எழுதுவோருக்கு பிப். 17ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இது குறித்தும் வங்கித் தேர்வு குறித்தும் வழிகாட்டும் கருத்தரங்கம், வருகிற பிப்.17-ஆம் தேதி திங்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சென்னை ஈ.வெ.கி.சம்பத் சாலை யில் உள்ள பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடைபெறும். அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு, 044-2661-8056, 90928-81663, 99406-38357 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம், பிப்.5 :காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகுதியான நபர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்பிசி, பிசி (முஸ்லிம்), ஓபிசி.ஓசி வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்சி, எஸ்டி, எஸ்சி (அருந்ததியர்) 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயதுவரம்பு இல்லை. ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக்கூடாது. மேற்காணும் தகுதியுடைய பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in//Empower என்ற இணையதள முகவரியிலும் பதிவுசெய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிப்.29 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொத்தடிமைகளாக இருந்த  இருளர் மக்கள் மீட்பு
மதுராந்தகம், பிப்.5- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், வேட்டப் பெரும்பாக்கம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட பத்து பேர் மீட்கப்பட்டனர்.   இந்த ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக இருளர் இன மக்கள் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கிவருவதாக வருவாய்த்துறைக்கு கிடைத்த தகவலின் படி மதுராந்தகம் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அரிசி ஆலையில் சோதனை நடத்தினர். மீட்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு விடுதலை சான்றுகள், ரூபாய் ஆயிரம் உதவித் தொகை மற்றும் வேஷ்டி சேலைகள் வருவாய்த் துறை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் மதுராந்தகம் வட்டம் எல்என்டத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், குடும்ப அட்டை இருளர் இனச் சான்று வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா தெரிவித்துள்ளார். மேலும் இருளர் இன மக்களை கொத்தடிமையாக வைத்திருந்த அரிசி ஆலை உரிமையாளர் அண்ணாதுரை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.