tamilnadu

img

பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான வழக்கில் தொடர் நடவடிக்கை-விரிவான விசாரணை தேவை.... பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு மாதர் சங்கம் வலியுறுத்தல்....

சென்னை:
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ள சென்னை  பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் இராஜகோபால்  மீதானவழக்கில்  தொடர் நடவடிக்கை மற்றும் விரிவானவிசாரணை தேவை என்று வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் மனு அனுப்பியுள்ளது.இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்  பி.சுகந்தி வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:

சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மா சேஷாத்திரிபள்ளியில் பயிலும் மாணவிகள் அங்குள்ள ஆசிரியர் இராஜகோபால் என்பவரால்  தொடர்ந்து பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக ஆசிரியர் மீது பல மாணவிகள் அளித்தபுகார்கள் தமிழகம் முழுவதும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இது போன்ற பாலியல்சீண்டல்கள் கடந்த 19 ஆண்டுகளாக அப்பள்ளியில்நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில்பள்ளி நிர்வாகத்தில் மாணவிகள் பல முறை புகார்அளித்ததாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனாலும்பள்ளி நிர்வாகம் இது வரை, இதன்மீது எந்தநடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளதன் மூலம்,ஆசிரியருக்கு சாதகமாகவே நடந்துள்ளதாகவும் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.இவ்வழக்கில் பள்ளி நிர்வாகம் தான் புகார்தாரராக இருந்திருக்க வேண்டும். நிர்வாகம் இதுகுறித்து எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதஅறமற்ற செயலை ஜனநாயக மாதர் சங்கம்வன்மையாக கண்டிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இது போக்சோ சட்டத்தின் பிரிவு 21-இன் படிதண்டைக்குரிய குற்றமாகும். பள்ளி நிர்வாகம் எந்தநடவடிக்கையும் எடுக்காத நிலையில்  தமிழக காவல்துறை துரிதமான நடவடிக்கையை எடுத்து, போக்சோ சட்டத்திற்குட்பட்ட பிரிவுகள் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இராஜகோபாலை கைது செய்திருக்கிறது. தமிழக மக்களின் மிகப் பெரிய நெருக்கடிக்குப் பிறகுதான், பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

இச்சூழலில் பள்ளிக்கல்வித்துறைக்கும், காவல்துறைக்கும்  அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சில கோரிக்கைகள் முன்வைக்கிறது.-போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டதாலும், Right to Speed Trial (வழக்கைவிரைந்து முடிப்பதற்கான அடிப்படைஉரிமை)என்பதை உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைஎன்று வரையறை செய்திருப்பதன்படியும் இவ்வழக்கை, கொரோனா காலமென்று காலம்தாழ்த்திவிடாமல், குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடித்துகுற்றவாளிக்கு உரிய தண்டனை கொடுக்கவேண்டும்.

-இதுபோன்று வேறு பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தைரியமளித்து பாதிக்கப்பட்ட அனைவரையும் புகாரளிக்க ஊக்கமளிக்க வேண்டும். போக்சோ சட்டப் பிரிவு 23 இன்படி,  புகார் மற்றும் சாட்சியம் அளிப்பவர்களின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப, பள்ளி, வகுப்பு மற்றும் உறவினர்கள், அண்டை வீட்டார்களின் விவரங்கள் வெளிவந்து விடாமல், பாதுகாக்கப்பட வேண்டும்.-கைதாகியிருக்கிற ஆசிரியர் இராஜகோபால் பள்ளிக்குள் இது போன்ற குற்றம் செய்கின்ற கருப்பாடுகள் இருப்பதாக காவல் துறையில் வாக்குமூலம்கொடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதுபற்றியும் விரிவான, துரிதமான விசாரணை தேவை.

-பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சட்டம் 2013 (Prevention of Sexual Harassment at Workplace Act)-இன்படி பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் புகார்களைவிசாரிப்பதற்கான அமைக்கப்பட்டிருக்கும் பாலியல் புகார்கள் விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு விவரங்களையும் யாரென்பதை வெளிப்படையாக பள்ளிஇணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும்இந்த விசாரணைக்குழுவால் நடைபெறவிருக்கும் அனைத்து விசாரணைகளும், பாதிக்கப்பட்டவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு, வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் அதிமுக்கியமாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போக்சோ  சட்டத்தின் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு பாலியல் நிகர்நிலை பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் ஜனநாயக மாதர் சங்கம் பள்ளிகல்வித்துறையையும் தமிழக காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

;