சென்னை, மே 25-மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்பிக்கள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்எல்ஏக்கள் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக சென்று, கலைஞர் நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினர். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. திமுக 19 மக்களவை தொகுதிகளிலும் 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் 13 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதிதாக தேர்வாகியுள்ள எம்.பி.க்கள் 19 பேர், எம்எல்ஏக்கள் 13 பேருடன் சனிக்கிழமையன்று (மே 25) சென்னை மெரீனாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து, பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகம் நோக்கி ஊர்வலமாக சென்றார்.அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதைத் தொடர்ந்து, புதிதாக தேர்வாகியுள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் பெரியார் திடலுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தும் புதிதாக தேர்வாகியுள்ள திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாழ்த்துப் பெற்றனர். பின்னர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும், சென்னை கீழ்ப்பாக்கத் தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்திற்கு சென்று அவரிடமும் வாழ்த்துப் பெற்றனர்.