ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டி காட்டி உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இன்றைய தீர்ப்பாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல கட்டங்களாக அந்த பகுதி மக்கள் போராடி வந்தார்கள். குறிப்பாக, குமரெட்டியாபுரம் மக்கள் 100வது நாளான 2018, மே மாதம் 22-ம் தேதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடிய மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தி 15 பேர் உயிரிழந்ததுடன், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். இதன்பின்னரே, மே மாதம் 28-ம் தேதி தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான தடை உத்தரவை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்திலும், பசுமை தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகளை தொடுத்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து ஆலை செயல்படுவதற்கான தடை தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பல்லாண்டுகளாக போராடி வந்த தூத்துக்குடி பகுதி மக்களின் நியாயமான உணர்வுகளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினால் தூத்துக்குடி பகுதி சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதையும், சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் தொழில்வளர்ச்சி பாதகமானது என்பதையும் உயர்நீதிமன்ற தீர்ப்பு தெளிவு படுத்தியுள்ளது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நிராகரிக்க வேண்டுமென பசுமைத்தீர்ப்பாயத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கறிஞர் மூலம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இத்தீர்ப்பு காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியான 15 தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிற தீர்ப்பு என்பதையும், அவர்களது தியாகம் வீண் போகவில்லை என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை எதிர்த்து எண்ணற்ற வலி, வேதனைகளோடு போராட்டங்கள் நடத்திய அனைத்துப்பகுதி மக்களுக்கும், நீதிமன்றத்தில் வழக்காடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
வேதாந்தா நிறுவனம் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள நிலையில், உச்சநீதிமன்றத்திலும் உரிய நியாயத்தை பெற அழுத்தமான வாதங்களை எடுத்து வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசையும் வற்புறுத்தி கேட்டுக் கொள்வதோடு, இந்த ஆலையை தூத்துக்குடி மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் வரை ஒன்றுபட்ட போராட்டத்தை அனைவரும் முன்னெடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்.
- கே.பாலகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர்,
--