சட்ட விரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற தாம்பரம் காவல் உதவி ஆய்வாளரை வங்கதேச ராணுவம் கைது செய்துள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையமாக சேலையூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. திருச்சியைச் சேர்ந்த ஜான் செல்வராஜ் மடிப்பாக்கத்தில், தங்கி சேலையூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்து வந்த நிலையில் மருத்துவ விடுப்பில் சென்றவர் தற்போது வங்கதேச ராணுவத்தில் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் காவல் நிலையத்தில், குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தவர் என்பதால் சட்ட விரோத கும்பலுடன் தொடர்பா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ வீரர்கள் விசாரித்துள்ளனர். விசாரணையில் இவர் காவல் அதிகாரி எனத் தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட மாநில காவல் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத கும்பலுடன் தொடர்பு இருந்ததன் காரணமாக எல்லை கடந்து சென்றாரா? இவர் எல்லையை ஊடுருவ என்ன காரணம்? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் துவங்கி உள்ளனர். இவர் தங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.