சென்னை:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 8வது முறையாக தரப்பட்ட அவகாசம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதம் நீட்டிக்க ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரும் மனு, நீதிமன்ற தடை ஆணையை நீக்கக்கோரும் மனு உள்ளிட்ட மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்று ஆணையம் புகார் தெரிவித்துள்ளது.
மேலும் அப்போலோ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்கக் கோரும் போது, வழக்கு விசாரணை தாமதமாவதை குறைந்தபட்ச ஆட்சேபனை கூட தெரிவிக்காமல் அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்ப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.எனவே வரும் 24 தேதியுடன் முடிய உள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஆறுமகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளது.
அரசுக்கு மனமில்லை...
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,”ஜெயலலிதா மரணம் தொடர்பான சதியை வெளிக்கொண்டு வர தமிழக அரசு தயாராக இல்லை என்பது அம்பலமாகிறது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 37 மாதங்கள் உருண்டோடியபோதும் விசாரணை இன்னும் முடியவில்லை.திமுக ஆட்சி அமைந்ததும் ஜெ. மரண சதி விசாரிக்கப் பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என கூறியுள்ளார்.