tamilnadu

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

சென்னை, நவ.2- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதி யானோருக்கு நவ.25 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 உரிமைத் தொகை  வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக் கம் கொண்டது இந்த திட்டம்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த  திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மாதம்  14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியானவர் களுக்கு நவ.25 ஆம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். தங்கள் பெயரை சேர்க்க கோரி அக்.25 வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்னதாக ரூ.1,000 செலுத்தப்பட வாய்ப்பு  உள்ளது. கடைசி நாளான அக்டோபர் 25 வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.