சென்னை,அக்.10- துணைவேந்தர் நியமனத்தில் முரண்பாடு களையப்பட்டு விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அப்போது அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில், ஆளுநருடன் உயர்கல்வித்துறை நட்புறவுடன் செயல்படும். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்தது என்பதை நிரூபிக்க வேண்டும். பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். 4,000 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாநில உரிமை, தமிழக அரசின் கல்வி நிலை, உயர்கல்வியின் கொள்கைநிலை, இவைகளையெல்லாம் நிலைநிறுத்தித்தான் செயல்பாடுகள் அமையும். எனவே ஆளுநருடன் முட்டல்,மோதல் என்பது தமிழக அரசு உருவாக்கிக் கொள்வதில்லை. என்றைக்கும் நட்புணர்வோடு தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சரும், உயர்கல்வித்துறையும் உறுதுணையாக இருக்கும்.
துணைவேந்தருக்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு, துணைவேந்தர் நியமனத்தில் முரண்பாடு களையப்பட்டு விரைவில் துணைவேந்தர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.