அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2012 ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி அன்றைய பாஜக அரசு அங்கன்வாடி மையங்களை தனியார் மயமாக்க சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்து படிப்படியாக தனியார்மயமாக்கி வருகிறது.
எனவே, இந்த நாளை அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு தினமாக அணுசரித்து இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 5 ஆண்டு பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும்.
துறைச்சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க புதிய செல்போன் வழங்க வேண்டும், மினி மையங்களிலிருந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை (இன்கிரிமென்ட்) வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்ககங்களாக எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.டெய்சி, நிர்வாகிகள் பி.மணிமேகலை, எஸ்.ஹேமபிரியா உள்ளிட்டோர் பேசினர்.