சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் மண்டலம் 7வது வார்டு85ல் துப்புரவு தொழிலாளர் குடியிருப்பு உள்ளது. 1970ஆம் ஆண்டு அம்பத்தூர் நகராட்சியாக இருந்த போது இக்குடியிருப்பு உருவாக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 400 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது. இங்கு சுமார் 300க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் 600க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகளை தூய்மைப்படுத்தும் இவர்களின் குடியிருப்பு பகுதிக்கு கழிவு நீர் இணைப்பு, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு போடப்பட்ட 3 போர்களில் இரண்டு போர்கள் பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீருக்காக இவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டும் கூட இன்னும் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள மழைநீர் கால்வாயில் விடப்படுவதால் கொசு உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.குறிப்பாக இப்பகுதியில் மட்டும் 8க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழும்நிலையில் உள்ளன. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மாணவர்கள் இரவுநேரங்களில் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து கடந்த ஒரு ஆண்டாக பலமுறை மின்வாரியத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இப்பகுதியில் வசிக்கும் பாபு கூறுகையில், ஊரையே சுத்தமாக வைத்திருக்கும் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு சுத்தமான குடிநீர் இல்லை. கழிவுநீர் இணைப்பு இல்லை. அனைத்து சாலைகளும் குறுகலான சாலைகள். சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. எங்களுக்கு அரசு புதிதாக குடியிருப்பு கட்டித் தர வேண்டும். கழிவுநீர், மெட்ரோ வாட்டர் இணைப்பு வழங்க வேண்டும். மழைநீர் வடிகால்வாய் அமைத்துத்தர வேண்டும். குறைந்த மின் அழுத்தம் காரணமாக இரவு நேரங்களில் பலர் சாலையில்தான் உறங்குகிறார்கள் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் சு.பால்சாமி கூறுகையில், மக்களின் நீண்டகால கோரிக்கையை மின்வாரியமும், மாநகராட்சியும் செவிசாய்க்கவில்லை. உடனடியாக அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் மக்களை திரட்டி மின்வாரிய அலுவலகத்தையும், அம்பத்தூர் மண்டல அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம் என்றார்.50 ஆண்டுகளுக்கு மேலாகியும் துப்புரவு தொழிலாளர்களின் குடியிருப்பின் அவலநிலை மாறவில்லை. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூடஅவர்களின் நிலை அப்படியே தொடர்வதுவேதனையான விஷயம். மாநகராட்சியும், மின்வாரியமும் அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமா? அல்லது போராட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துமா?- எஸ்.ராமு