tamilnadu

img

டங்ஸ்டன் திட்டத்தை அனுமதித்தால் பாலைவனமாக மாறிவிடும்: எம்.சின்னதுரை

சென்னை,டிச.9- ஒன்றிய அரசின் டங்ஸ்டன் திட்டத்தை அனுமதித்துவிட்டால் மதுரை மாவட்டம் பாலைவனமாக மாறி விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை எச்சரிக்கை விடுத்தார்.

பாஜகவின் மாற்றாந்தாய் போக்கு

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம். சின்னதுரை, ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு உரிய வரிப் பங்கீட்டை தர மறுக்கிறது. எய்ம்ஸ், மெட்ரோ ரயில் உள்ளிட்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குகூட உரிய காலத்தில் நிதி ஒதுக்க மறுக்கிறது. கல்வி உதவித் தொகை வழங்க மறுக்கிறது. தமிழகத்தையும், தமிழக மக்களையும் மாற்றாந்தாய் போக்குடன் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கோடு தமிழக வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிடவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் டங்ஸ்டன் கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசிடம் எவ்வித கருத்துக்களும் கேட்காமல் ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக ஏலம் விட்டுள்ளதை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டித்தார்.

ஏலத்தில் விடப்பட்ட இந்த கனிமத் தொகுதிக்குள் தமிழ்நாட்டின் முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட கோவில்கள், 200 ஆண்டுகள் பழமையான தர்கா உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றான அழகர் மலையானது சுரங்கத் தொகுதியின் எல்லையி லிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன.  இப்பகுதியில் வெள்ளை  வல்லூறு, ராசாளிக் கழுகு உள்ளிட்ட அரிய பறவை வகைகளும் 250க்கும்  மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சூழல் மற்றும் வர லாற்றுத் தொன்மை வாய்ந்த நிலப்  பரப்பு அழியும். இதனால் மதுரை மாவட்டமே பாலைவனமாக மாறி  விடும் என்றும் சின்னதுரை எச்சரிக்கை செய்தார்.

உள்ளாட்சிகளில் தீர்மானம்

வேளாண்மை, மேய்ச்சல் உள்ளிட்டவையும் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படும். இப்பகுதி பொதுமக்கள் கடுமையான ஆட்சேபணை தெரிவித்து போராடி வருகிறார்கள். எனவே, இக் கனிமத் தொகுதியை ஹிந்துஸ்தான் ஜிங்க்  நிறுவனத்திற்கு ஏலத்தில் வழங்கியதை ரத்து செய்வதோடு அடுத்த கட்ட தலங்களிலும் இப்பகுதி யை இடம் பெறச் செய்யக்கூடாது. மேலும், ஒன்றிய அரசின் இந்த திட்டத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு அழிக்க நினைக்கிறது. அதில் டங்ஸ்டன் திட்டமும் ஒன்று. குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்மை விட பன்மடங்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட டங்ஸ்டன் திட்டத்தை கொள்கை அடிப்படையில் இது போன்ற திட்டங்களுக்கு அனுமதி மறுத் திருக்கிறது. புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு, தமிழ்  நாட்டின் மீது திணிக்கிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழகத்தின் வரலாற்று பாரம்பரி யங்களை முற்றாக அழிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு உள்நோக்கத்து டன் செயல்படுகிறது. நமது தொன்மை  சின்னங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். வெறும் நிலப் பரப்பை மட்டும்  அல்ல நமது பாரம்பரிய பொக்கிஷங்களையும் அழிக்கும், இதனால், மதுரை மாவட்டத்தில் மக்கள் கொந்தளித்த வண்ணம் உள்ளனர். 

டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், நாடு தழுவிய அளவில் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ள பாஜக அரசு, தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்க வில்லை. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசும், நமது முதல்வர் அனுமதிக்கமாட்டார். எனவே, அரசின் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு கொடுப்போம் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர்.