tamilnadu

24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி

சென்னை, ஜூன் 6-தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா கடந்த 2016ஆம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனை மாநிலங்கள் மசோதாவில் உள்ளபடியோ அல்லது அந்தந்த மாநில நடைமுறைத் தேவைகளின்படி மாற்றம் செய்துகொண்டோ பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும், பணியில் இருக்கும் ஊழியர்கள் பற்றிய தகவல்கள் அனைவரது பார்வையிலும் படும் இடத்தில் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும், கூடுதல் நேரம் வேலை பார்த்தால் கூடுதல் தொகை வழங்க  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடுதல் நேரமாக ஒரு நாளைக்கு 10.30 மணி நேரமோ அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேலோ பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாகவோ, விடுமுறையிலோ பணியில் ஈடுபடுத்துவது குற்றம் என்றும் தொடர்புடைய மேலாளர் அல்லது நிறுவனத்துக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது என்றும், அவசியம் இருந்தால் பெண்களின் எழுத்துப்பூர்வ சம்மதத்துடனே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பணியில் இருக்கும் பெண்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

;