சென்னை, ஆக. 26 - மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுக - பாஜக கட்சிகளிடையே மீண்டும் பனிப்போர் வெடித்துள்ளது. சென்னையில் கடந்த வாரம் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப் பட்டது. இதில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “திமுகவும் பாஜகவும் ரகசிய உறவு வைத்திருக்கின்றன” என்றார். இதைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஒன்றிய அரசு ஏற்பாட்டில் எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா நாணயம் வெளியிட்டால்தான் புகழ் கிடைக்கும்” என்ற தோரணையில் அறிக்கை விட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,“ அதிமுக ஆட்சி வரு வதற்கு முன்பு தமிழகத்தில் கடன் இருந்தது. நான் முதலமைச்சராக இருந்தபோது 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி தான் கடன் இருந்தது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லை. அப்போதும் கூட விலைவாசி ஏற்றதில்லை, வரிகள் போடவில்லை. ஆனால், ஒன்றியத்தில் பாஜக ஆட்சி 2014 ஆம் ஆண்டு வந்தது 55 லட்சம் கோடி தான் கடன் இருந்தது. 2024 பார்க்கும்போது 168 லட்சம் கோடி கடனில் இந்தியா உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 113 கோடி அதிகமாக கடன் வாங்கி உள்ளனர். என்ன திட்டத்தை கொண்டு வந்து கடன் வந்தது. பாஜக எந்த திட்டத்தை யும் கொண்டு வரவில்லை” என்று விமர்சனம் செய்தார். மேலும், “பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்றதிலிருந்து ஒன்றிய அரசிடம் இருந்து எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அண்ணாமலை கொண்டு வரவில்லை. தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் பேசினார். 500 நாட்களில் 100 திட்டங்களை கொண்டுவந்து விடு வேன் என்று பேசினார். எத்தனை திட்டங்களை கொண்டு வந்தார்?” என்று கேள்வி எழுப்பி னார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுவது எல்லாம் பொய் என கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை யில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமியின் ஊரில் சிலுவம்பாளையத்தில் கொலை நடந்தது.
கைது செய்யப்பட்ட ஒருவர் சிறைக்கு சென்றார். கைது செய்யாமல் இருக்க மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒளிந்து இருந்தார். தற்போது திமுகவில் இருக்கும் மூத்த அமைச்சர், அன்று அதிமுகவின் அமைச்சர். அவரது கை, காலை பிடித்து, வழக்கை முடித்து வெளியே வந்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் தோற்றவர்” என்று கடுமையாக சாடினார். அதேபோல், “கூவத்தூரில் நடந்தது அலங்கோலம். கூவத்தூரில் ஒப்பந்தம் அடிப்படையில் முதலமைச்சரை தேர்வு செய்தது,
அதன்பிறகு தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்றும் பேசினார். இதற்கு, “அண்ணாமலையைப் போல எடப்பாடி பழனிசாமி யாருடைய சிபாரிசின் பேரில் பதவிக்கு வரவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “2026 சட்டமன்ற தேர்தலில் திமுக -அதிமுக இடையேதான் போட்டி என்றும் அண்ணாமலை மாநிலத் தலைவரான பிறகு ஏற்கெனவே வெற்றி பெற்ற கன்னியாகுமரியிலும் பாஜக தோல்வியை தழுவியது” என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
“அதிமுகவின் வரலாறு தெரியாமல் மன அழுத்தத்தால் அண்ணாமலை பேசி வரு வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மனநலம் பிறழ்ந்து பேசி வருவதாகவும் அண்ணாமலையை ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழிசை அறிவுரை இதனிடையே, அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராசன் அறிவுரை வழங்கியுள்ளார். “தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும்.
ஒரு மாநில தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமோ அந்த மரியாதையை எதிர்க்கட்சித் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். மாநில தலைவருக்கு மரியாதை கொடுக்கிறேன் என்றால் அது அவரது பாணி என்று கடந்து சென்று விடுவேன். மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பது என் கோரிக்கை!” என்று தமிழிசை தெரி வித்துள்ளார்.