காலமானார்
சென்னை, டிச. 9- திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த ஏ.தங்கராஜ் (95) ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) காலமானார்.
இவர் திருவொற்றியூர் தெற்கு பகுதிக்குழு உறுப்பினர் டி.ஆண்ட்ரூசின் தந்தை ஆவார். அவரது உடலுக்கு சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் செல்வகுமாரி, புவியரசி, மாதர் சங்கத்தின் பகுதி நிர்வாகிகள் கஸ்தூரி, புஷ்பா கட்டுமான சங்க நிர்வாகி சீனிவாசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் ரவீந்திரன், செம்மல் அபேதன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் காதர் உசேன், சங்கர் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் திங்கட்கிழமை காசிமேடு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காலடிப் பேட்டையில் 1970களில் திமுகவின் தீவிர தொண்டரான தங்கராஜ் மளிகை கடை நடத்தி வந்தார். தங்கராஜ் கடை தான் நாளடைவில் ராஜா கடை ஆனது. பேருந்து நிறுத்தத்தின் பெயரும் ஆனது.
மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவு முட்டை தரம் ஆய்வு
விழுப்புரம்,டிச.9- விழுப்புரம் மாவட்டத்தில் புயல் மழை காரணமாக விடுமுறைக்கு பின்னர் திங்கள்கிழமை திறக்கப்பட்ட பள்ளியை தூய்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சால் புயலின் காரணமாக கனமழை வெள்ள பாதிப்பினை தொடர்ந்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சாவடிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.