மாடு மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி
காஞ்சிபுரம், ஜூன் 20 - மாங்காடு அருகே சாலையில் நின்றிருந்த மாட்டின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பூவிருந்தவல்லி, திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர் திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மோகன் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இருளர் சமூக மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் இயக்கம்
சிதம்பரம், ஜூன் 20- சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சி எம்ஜிஆர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் இருளர் சமூக மக்களின் குழந்தைகள் 140 பேர் கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு அந்த பகுதியில் 5 வயதை நிரம்பிய நிலையில் 16 மாணவர்கள் இருந்தனர்.
இவர்களை அனைவரையும் ஒரே நாளில் பள்ளியில் சேர்த்து மாணவர்களுக்கு மாலை அனிவித்து கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளியின் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். இதில் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் மகாலட்சுமி, சத்தியநாராயணன், ராஜா செல்வம், சரண்யா, மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.