உழைத்த மேனி அயர்ந்து உறங்க சங்கு ஊதி சாமுண்டி அடிக்கும் வாரிச் சுருட்டிய நிலையில் – தூக்கம் கலைந்தும் கலையாமலும் எழ கூடவே தூங்கிய பிள்ளையும் எழும்.
தாய் தன்னை விட்டிட்டு போகும் நோக்கறிந்து பாலுக்கு அழும் அழும் பிள்ளையை அமர்த்திப் பால் கொடுக்க நேரம் கூடும்
சாட்டை அடி, சாணிப்பால் உண்டு என மனசு பதைப்பதைப்போடு புலம்பும் ஒருபுறம் மனச தேத்திக் கொண்டு தாய் கிழிந்த கோணியை உள்ளாடையாக அணிந்து செல்லும் கொடுமை மறுபுறம்
காலங்காலமாய் உழைத்தாலும் ஏழைக்கு காணி நிலம் சொந்தமில்லை தூக்கத்தை கெடுத்து துயரத்தில் கனவு விடியற்காலை சங்கு ஊத கனவும் கலைந்தது
மடிகனத்து மார்பு வலித்தாலும் பண்ணையார் அனுமதியின்றி பசியால் அழும் பிள்ளைக்கு பால்கொடுக்க முடியாது வலிபொறுக்காது மனசை கல்லாக்கி
நிலத்தில் பீச்சிவிடும்
கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை தஞ்சை தரணியின் பண்ணை அடிமைத்தன மண்ணைத்தவிர
உலகத் தொழிலாளர்கள் வேலைக்கும் கூலிக்கும் போராடும் போது பசியால் அழும் பிள்ளைக்கு பால்கொடுக்க நேரம் வேண்டி போராடிய அதிசயம் இங்கேதான் கொடுமை ஆனால் உண்மை.
அரைப்படி நெல்மணிகள் கூட்டிக் கேட்க வெண்மணியின் கண்மணிகள் வெந்து தணிந்த சாம்பல்மேல் உருட்டிப் பிடித்தால் வாழைப் பூ மொட்டு காட்சியளிக்கும் ஸ்தூபியை தொட்டு முத்தமிட்டு சபதம் ஏற்க
நரை தட்டிய கிழமும் விடலைப்பிள்ளைக் கூட்டமும் ஆயிரம் ஆயிரமாய் ஊர்வலம் மனிதகுலம் உள்ளவரை கண்மணிகள் தியாகத்திற்கு மகுடம் சூட்டும் காட்சி மானுடம் வியக்கும்!
- தஞ்சை கே.அபிமன்னன்