tamilnadu

7 பேர் விடுதலை: ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?

சென்னை, மே 11-ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலையில் சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் தமிழக ஆளுநருக்கு வர உள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் மத்தியில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது தெரிந்தவுடன் முடிவெடுக்கலாம் என்று அவர்காத்திருப்பதாக கூறப்படுகிறது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கு நீண்ட நெடிய பயணத்தை கடந்து வந்திருக்கிறது.இந்த வழக்கின் திருப்பமாக, 7 பேர் விடுதலையில் உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததால், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில் வலுத்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து, ஆளுநருக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த தீர்மானம் வந்தவுடனேயே, இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடனடியாக தனது முடிவை ஆளுநரால் அறிவிக்க முடியவில்லை. ஆனால் அவர் சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..இந்த ஆலோசனையின்போது பலர் அவரிடம், ‘இது 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் நீதிமன்றங்களில் பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. இந்த தீர்ப்புகளின் அடிப்படையில் நாம் இந்த பிரச்சனையை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. எனவே தேசிய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டு, அதன்பேரில் முடிவெடுப்பதே சிறந்தது’ என்று கருத்து தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் இந்திய அளவில் தலை சிறந்த சட்ட நிபுணர்களின் கருத்துகளை ஆளுநர் கேட்டதாகவும் அவர்கள் அடுத்தவாரம் அதனை தெரிவிக்கஇருப்பதாகவும் கூறப்படுகிறது..இந்தநிலையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 7 பேர் விடுதலையில் எந்த தடையும் இருக்காது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேநேரத்தில், இந்திய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் ஆளுநர் கைக்கு வர உள்ளது. அதன் பின்னர் ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.