tamilnadu

img

கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய 3 இளைஞர்கள் கைது

ஆவடி, நவ. 26- ஆவடி அடுத்த  இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் பொது மக்களை தாக்கிய 3 இளை ஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை தினசரி சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கி செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் வழக்கம் போல் அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் பயணிகள், திங்கட்கிழமை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது அங்கு போதையில் வந்த 4க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நடைமேடையில் இருந்த இரும்பு கம்பி, டியூப் லைட் உள்ளிட்டவற்றை எடுத்து  பெரியவர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என கண்ணில் பட்டவர்களையெலாம் சராமாரியாக தாக்கினர். இதில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட முதியவர் பரமசிவத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆவடி ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தேடி வந்தனர். இந்நிலையில், ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள் சுபாஷ் (20), இப்ராகிம் (23) மற்றும் 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.