சென்னை, ஜூன் 13- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு புதிய ரயில்களை வாங்க நிதி ஆயோக் அனுமதி அளித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்கள் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று, குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதற்கட்ட வழித்தடத்திற்கு கூடுதலாக 28 ரயில்கள் வாங்க நிதி ஆயோக் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் தற்போது முதற்கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் சுமார் 54 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
2015ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் சராசரியாக சென்னை மெட்ரோ ரயில்களில் ஒரு நாளைக்கு 2.7 முதல் 3 லட்சம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் சென்னை மெட்ரோ ரயில் பயணம் செய்துள்ளனர். மிக விரைவான பயணம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பீக் ஹவர்சில் அதிக அளவிலான பயணிகள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ஆலந்தூர் மற்றும் வண்ணாரப்பேட்டை இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றால் சிஎம்ஆர்எல்-க்கு கூடுதலாக ரயில்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிஎம்ஆர்எல் ஒரு ஆலோசகரை நியமித்து அவர் ஒரு ஆய்வு நடத்தியதில் மெட்ரோ ரயிலுக்கு கிடைத்து வரும் ஆதரவை கருத்தில் கொண்டு முதல் கட்ட நெட்வொர்கிற்கு ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் தேவை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களுடன் ரயில் நிலைய வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும், இதன் மொத்த செலவு 2,820 கோடி என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கான திட்ட முன்மொழிவு மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்திற்கு நிதியளிக்க சர்வதேச வங்கி ஏற்கெனவே வட்டியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது நிதி ஆயோக் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதல் கட்ட திட்டத்திற்கு கூடுதல் ரயில்களை வாங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அடுத்த மாதம் அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். அதன் பிறகு நிதி உதவிக்கான திட்டத்தை அனுப்பி வைப்போம். இந்த ரயில்களை தயாரித்து இயக்க இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.