tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கடலூர் அருகே 23 கிலோ  கஞ்சா பறிமுதல் 10 பேர் கைது

கடலூர், மார்ச் 29- கடலூர் அருகே உள்ள எம்.புதூர் காச நோய் மருத்துவ மனை அருகே நின்றிருந்த ஒரு கும்பலை பிடித்து விசாரித்த போது, ஆந்திராவில் இருந்து சுமார் 23 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து எம்.புதூர் பகுதியில் விற்பனை செய்ய இருப்பது தெரிய வந்தது.  இதை அடுத்து போலீசார் அங்கிருந்த கஞ்சாவை பறி முதல் செய்து இதில் சம்பந்தப்பட்ட திருவந்திபுரம் பகுதியை சேர்ந்த சிவாஜி, சென்னையை சேர்ந்த சந்துரு, கொக்கு பாளையத்தை சேர்ந்த ஆனந்த், கோண்டூர் பகுதியை சேர்ந்த சூர்யா, எம்.புதூர் பகுதியை சேர்ந்த  விக்னேஷ்,  சூரிய பிரதாப், அரவிந்த், ஆகாஷ், கார்த்தி கேயன், ஆகியோரை கைது செய்தனர்.  மேலும் அவர்கள் வைத்திருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 7 செல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவின் மதிப்பு ரூ.23 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நீட் தேர்வு எழுத இருந்த  மாணவி அச்சத்தில் தற்கொலை

கூடுவாஞ்சேரி,மார்ச் 29-  ஊரப்பாக்கத்தில் 3 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி, 4வது முறையாக தேர்வு எழுத இருந்த நிலையில், பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் பின்புறம் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தேவதர்ஷினி (21) என்பவர் 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தார். இந்நிலையில், வரும் 4ம் தேதி மீண்டும் 4வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்தார். இந்த தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்து வந்தார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததால் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவதர்ஷினி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மகள் தூக்கில் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். தகவலறிந்து கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு  நிவாரணம்

விழுப்புரம், மார்ச் 29- விழுப்புரத்தில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.30லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் பொன்முடி சனிக்கிழமையன்று வழங்கினார். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வழுதரெட்டி, பாலாஜி நகரில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த தமிழ்ச்செல்வன்  சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவரின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்து, ரூ.30 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையினை வழங்கினார்.

கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மையம்  சிறைவாசிகளுக்கு புத்தகம் வழங்கியது

கடலூர் கோவன் நுரையீரல் சிகிச்சை மையத்தில் சார்பாக சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்று வரும் 3ஆவது புத்தகத் திருவிழாவில், கடலூர் கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மையம் சார்பாக,  தமிழ்நாட்டிலுள்ள சிறைவாசிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டு முதலமைச்சரின்  “கூண்டுக்குள் வானம்- சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வீர்” என்ற திட்டத்தின் கீழ்  ரூ.20ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு துறை சார்ந்த 120 புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சிறைத்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ஜெயமணி , கோவன் நுரையீரல் மையத்தின் நிறுவனர் மருத்துவர் பால. கலைக்கோவன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.