tamilnadu

img

போலிச் சான்றிதழ் விவகாரம்: தீட்சிதர் உட்பட 2 பேர் கைது!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலிச் சான்றிதழ் தயாரித்த விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் நாகப்பன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளது.  இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  அதன் பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 
 அப்போது அங்கு கிடந்த சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை செய்தபோது போலிச் சான்றிதழ்கள் என தெரியவந்தது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், போலிச் சான்றிதழ் தயாரித்த விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் நாகப்பன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சங்கரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 1000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், XEROX மெஷின், ப்ரிண்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 
அதே நேரத்தில், இவர்கள் வழங்கிய போலி சான்றிதழ்களை வைத்து எத்தனை பேர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்? போலி சான்றிதழ் அச்சடித்தவர்களுக்கு நெட்வொர்க் உள்ளதா? இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.