tamilnadu

தமிழக சட்டப்பேரவையில் 19 மசோதாக்கள் நிறைவேற்றம்

சென்னை, டிச. 10 தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், செவ்வாயன்று மேலும் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

செவ்வாய்கிழமை (டிச.10) கனிமங்களை நிலத்தில் இருந்து எடுத்து சென்று விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு வரி விதிக்கும் நில வரிச் சட்டமுன்வடிவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிய திருத்தச் சட்ட முன்வடிவு மற்றும் தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு திருத்த சட்டமுன்வடிவுகளும் தாக்கல் செய்யப்பட்டன.

கூட்டுறவு சங்க தனி அலுவலர்கள்

மேலும், தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு, தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் உரிமம் வழங்குதல் திருத்த சட்டமுன்வடிவு, தனியார் பல்கலைக் கழகங்கள் திருத்தம் உள்ளிட்ட சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. அதிமுக மூன்று மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

திங்களன்று தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டம் 2017 மற்றும் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி விற்பனை (ஒழுங்குமுறை) இரண்டாவது திருத்த மசோதா 2024 ஆகியவற்றுக்கு அதிமுக ஆட்சேபம் தெரிவித்தது. தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2024 தொடர்பாக அதிமுக உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் சில கருத்துக்களை பதிவு செய்தனர்.

உயர்கல்வி தொடர்பான நான்கு மசோதாக்கள் உட்பட ஏழு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 10 சதவிகிதம் கேளிக்கை வரி  சென்னையில் அனுமதி கட்டண அடிப்படையில் நடத்தப்படும், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் வகை செய்யும் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.