tamilnadu

நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

20 ஆண்டுக்குப் பின் தூர்வாரப்பட்ட வாய்க்கால் 
சீர்காழி, ஆக.24- கொள்ளிடம் அருகே 20 ஆண்டுகளுக்குப் பிறகு வடிகால் உலை வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் தெற்குராஜன் பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து கொள்ளிடம் ஆற்றில் நாதல்படுகை என்ற இடத்தில் கலக்கும் வடிகால் வாய்க்கால் உலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.  இந்த வாய்க்கால் சேரும் களிமண்ணும் எப்பொழுதும் நிறைந்தே காணப்படுவதால் இந்த வாய்க்காலுக்குள் இறங்கி தூர்வாருவதில் சிரமம் இருந்து வந்தது. இதனால் கால தாமதமும், குறிப்பிட்ட நேரத்தில் தூர்வார முடியாமல் வேலைச் சுமையும் இருந்ததால் கடந்த 20 ஆண்டு காலமாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் தனித்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து மழை பொழிவு இல்லாமல் போனதால் வாய்க்கால் வறண்டு காணப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று இந்த வாய்க்கால் பொதுப்பணித் துறையினரால் 3 கிமீ தூரத்துக்கு தூர்வாரப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சுமார் 2000 ஏக்கர் நிலங்களுக்கு வடிகால் வசதியாக இருந்து வரும் இந்த வாய்க்கால் தூர் வாரி ஆழப்படுத்தப்பட்டதால் மழைக்காலத்தில் தேங்கும் அதிகப்படியான தண்ணீரை எளிதில் இந்த உலை வாய்க்கால் கொள்ளிடம் ஆற்றுக்குள் வெளியேற்றி விடும் என்றனர்.

புத்தூர் கூட்டுறவு சங்கத் தேர்தல்: ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
சீர்காழி, ஆக.24-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் கொள்ளிடம் வட்டார ஆசிரியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் உள்ளது. மயிலாடுதுறை கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பு மாவட்ட தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டு கடந்த 19-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.  இந்நிலையில் இரவு வரை வேட்பாளர் இறுதி பட்டியலை தேர்தல் அலுவலர் வெளியிடவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 7 1/2 மணிக்குப் பிறகு இரவு நேரத்தில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. 11 இயக்குநர்கள் கொண்ட இந்த தேர்தலில் 1 தலைவரும் மற்றும் 1 துணைத் தலைவரும் மீதம் 9 இயக்குநர்களும் இருந்து செயல்படுவார்கள். தேர்தலில் 36 உறுப்பினர்களின் வேட்பு மனுக்கள் செல்லத் தக்கதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான வாக்குப்பதிவு வரும் 26-ஆம் தேதி புத்தூர் கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை 27-ந் தேதி நடைபெற்று முடிவு அறிவிக்க இருக்கும் நிலையில் முறைப்படி தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முறைப்படி தேர்தல் நடத்தி முடிவு வெளியிடவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.