tamilnadu

img

மக்களின் போராட்டத்திற்கு பணிந்த சிலி அதிபர்

சீர்திருத்தம் கோரியும், பாகுபாடுகளைக் களையவேண்டும் என்று வலியுறுத்தியும் சிலி நாட்டின் தலைநகரில் சுமார் 10 லட்சம் பேர் பல மைல் தூரம் அமைதியான முறையில் பேரணியாகச் சென்றனர். இதைத்தொடர்ந்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்ற சிலி அதிபர் தெரிவித்துள்ளார்.

சிலியில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தை அரசு ஒடுக்க முயன்றால் கலவரம் வெடித்தது.  ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கிய இந்த போராட்டத்தில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பெரும் போராட்டத்தின் காரணமாக மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தலைநகர் சாண்டியாகோவில் பாதுகாப்பை ராணுவம் எடுத்துக்கொண்டது. அங்கு நெருக்கடி நிலையும் அமல்படுத்தப்பட்டது. இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 20 ஆயிரம் போலீசார், வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்  அங்கு விலை வாசி உயர்வு, சமத்துவமின்மை ஆகியவற்றால் ஏற்படுகிற அவதிகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல   தலைநகர் சாண்டியாகோவில் பேரணி ஒன்று நடந்தது. இந்த பேரணியில் 10 லட்சம் பேர் திரண்டதால் அந்த நகரமே குலுங்கியது.

இது குறித்து சாண்டியாகோ கவர்னர் கர்லா ரூபிலர் கூறும்போது, “தலைநகரில் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தை விட அதிகம் ஆகும்” என்றார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் புதிய சிலிக்கான கனவை போராட்டக்காரர்கள் பிரதிபலித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்களில் ஒருவரான பிரான்சிஸ்கோ ஆங்கிதார் என்பவர் கருத்து தெரிவித்தபோது, “நாங்கள் நீதி கேட்கிறோம். நேர்மை வேண்டும் என்கிறோம். நெறிமுறை சார்ந்த அரசு வேண்டும் என்று கேட்கிறோம்” என கூறினார்.
சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ நாங்கள் அனைவரும் மாறி விட்டிருக்கிறோம். இந்த பேரணி மகிழ்ச்சிகரமானது; அமைதிப்பேரணி. இதில் சிலி மக்கள் மிகவும் நியாயமான, ஒன்றுபட்ட சிலியை கேட்கிறார்கள். இது எதிர்காலத்தில் நம்பிக்கைக்கான பாதைகளை திறக்கிறது” என குறிப்பிட்டார்.
மேலும் 'மக்கள் கோரிக்கையை ஏற்று எனது அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டு உள்ளேன். இது குறித்து அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. விரைவில் மாற்றம் வரும்' என்றார். அமைச்சரவையை மாற்றி அமைக்கும் சிலி அதிபரின் அறிவிப்பால் போராட்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேர்மையான நெறிமுறை சார்ந்த அரசு வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தை தொடர உள்ளதாக இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர். 
பேரணியின்போது அதிபர் மாளிகை முன்னர் ஏராளமானோர் கூடி விட்டதாகவும், அவர்களை போலீசார் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.