1669 - நாட்குறிப்புக்காகப் புகழ்பெற்ற சாமுவேல் பெப்பிஸ், தன் நாட்குறிப்பை இந்நாளுடன் முடித்துக்கொண்டார். ஆங்கிலேயக் கடற்படையின் நிர்வாகியாகவும், இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராகவுமிருந்த பெப்பிஸ், 1660 ஜனவரி 1இலிருந்து, தொடர்ச்சியாக நாள்தோறும் நாட்குறிப்பு எழுதியிருந்தார். 1825இல் பதிப்பிக்கப்பட்ட இந்நாட்குறிப்பு, 1660-88 காலத்தில் நடைபெற்ற ஆங்கிலேய முடியாட்சியின் மறுசீரமைப்புகுறித்த தகவல்களுக்கான முக்கிய ஆதாரங்களுள் ஒன்றாக விளங்குகிறது. லண்டன் பெருந்தீ, லண்டன் பெரும் கொள்ளை நோய், இரண்டாம் டச்சுப்போர் முதலான நிகழ்வுகள்குறித்த நேரடித் தகவல்களை இவர் பதிவு செய்திருந்தார். ஜான் எவலின், 1640இல் மாணவப்பருத்திலிருந்து, 1706இல் இறக்கும் வரை எழுதிய நாட்குறிப்பு, 1818இலேயே பதிப்பிக்கப்பட்டாலும், பெப்பிஸ் அளவுக்கு விபரமான தகவல்கள் இல்லாததால் அதிகம் புகழ்பெறவில்லை. டயரி என்ற சொல் டயரியம் என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவானது. 2ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசர் மார்க்கஸ் ஆரிலியஸ், மெடிட்டேஷன்ஸ்(எனக்கு எழுதியவை) என்ற பெயரில் எழுதியிருந்த குறிப்புகளே நாட்குறிப்புக்கான மிகமூத்த உதாரணமாகும். 9ஆம் நூற்றாண்டில் லீ ஆவ், தென்சீனப் பயணம்குறித்து எழுதிய குறிப்புகளும், ஜப்பானியப் பட்டத்தரசி டெய்ஷியின் தோழியான செய் ஷோனகான் 990-1002இல் எழுதிய ‘தலையணைப் புத்தகங்கள்’ என்பதும் நாட்குறிப்புக்கான முன்னோடிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. 11ஆம் நூற்றாண்டில் அகமத் இபின்-பன்னா எழுதிய பயணக்குறிப்புகளே, நாள் வரிசையில், நவீன நாட்குறிப்பைப் போன்றிருந்தன. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது, நிகழ்வுகளையும், அவைகுறித்த தங்கள் உணர்வுகளையும் வெளியிடும் நோக்கமின்றி பலரும் எழுதி வைத்தனர். 1605இல் ஆங்கிலேய நாடகாசிரியர் பென் ஜான்சன், தனது நகைச்சுவை நாடகமான வால்ப்போன் என்பதில்தான், அன்றாட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்ட நூலிற்கு டயரி என்ற பெயரைப் பயன்படுத்தினார். இப்போதிருக்கும், நாட்கள் அச்சிடப்பட்ட நாட்குறிப்பை, முதன்முதலில் லெட்ஸ் ஃபிலோஃபேக்ஸ் குழுமம் 1812இல் வெளியிட்டது. நாட்குறிப்புக்கான இணையதளம் 1994இல் உருவாகியது. ஆனி ஃப்ராங்க், சாமுவேல் பெப்பிஸ், சார்லஸ் டார்வின், மேரி கியூரி, மார்க் ட்வைன் உள்ளிட்டோரின் நாட்குறிப்புகள் மிகப்புகழ்பெற்றவை.