பொன்னமராவதி, ஜூன் 28- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சி கட்டையாண்டிபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 148 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக எஸ்.தேக்கலாமேரி உள்ளார். இந்நிலையில் பள்ளியின் சாவிக் கொத்தை காணவில்லை என்றும், அதை மாணவர்கள் தான் எடுத்துள்ளனர் எனக் கூறி மூன்று மாணவர்களை அவர் அடித்துள்ளார். மேலும் பள்ளி நேரம் முடிந்தும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் இருந்துள்ளார். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், பணி நேரத்தில் பள்ளியில் இருப்பதில்லை என்றும், மாணவர்களை கடும் வார்த்தைகளால் திட்டுவதாகவும், ஆசிரியர்களிடம் சுமூகமான உறவு இல்லாததால் ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டிய தகவல்களை மாணவர்கள் மூலம் சொல்லி அனுப்புவதாகவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஊர் மக்கள் சார்பில் ஏற்கனவே புகார் அனுப்பபட்டுள்ள நிலையில் தற்போது தலைமை ஆசிரியரின் இச்செயலால் ஊர் மக்கள், பெற்றோர் தலைமை ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர்கள் ராஜா சந்திரன், பால் டேவிட் ரோசர்யோ, வட்டார கல்வி மேற்பார்வையாளர் செல்வகுமார் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரண்டு மாதங்களில் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர்.