tamilnadu

img

சிவபாக்கியத்தம்மாள் நகருக்கு கழிவுநீர் வடிகால் வசதி செய்து தருக!

சிபிஎம் வலியுறுத்தல் 


தஞ்சாவூர், பிப்.7- தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை நகராட்சிக்குட்பட்ட, 33 ஆவது வார்டு சிவபாக்கியத்தம்மாள் நகரில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் மனு அளித்தனர். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் சி.வி.சேகர், நகராட்சி மேலாளர் பாஸ்கர் ஆகியோரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது,  “கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ரயில்வே ஸ்டேஷன் சாலை, சிவபாக்கியத்தம்மாள் நகரில் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். நகராட்சிக்கு சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை முறையாக செலுத்தியும் வருகிறோம்.  நகரின் மையப் பகுதியான இங்கு கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இது வரை செய்யப்படவில்லை. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று, துர்நாற்றம் வீசுகிறது. இதனால்  கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க, வடிகால் வசதி செய்து தர வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.  மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் வலி யுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகளும், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி யிடம் தெரிவித்தனர். அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன், மாருதி பாலு, ராணி டெகரேஷன் கார்த்தி, ராஜ்குமார் உடனிருந்தனர்.