ராஞ்சி:
பசுவதைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து முகநூலில் பதிவிட்ட, கல்லூரி விரிவுரையாளரை, 2 ஆண்டுகளுக்குப் பின், ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு கைது செய்துள்ளது.
ஜீத்ராய் ஹன்ஸ்தா என்பவர், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் ஆவார். ஜாம்ஷெட்பூர், சாக்ஷியில் உள்ள அரசு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி ஒன்றில் புரிந்து வருகிறார். இவர், 2017-ம் ஆண்டு ஆதிவாசிகளின் உரிமை குறித்தும், மாட்டிறைச்சி உணவு குறித்தும் முகநூலில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அதில், “ஜோஹர் தாங்கிரி மைதன் என்ற திருவிழாவின் போது மாடுகளை பலி கொடுத்து அதனை உணவாக உண்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் அது ஆதிவாசிகளின் உரிமை. ஆனால், அவர்களை இந்துக்களைப் போல வாழுமாறு யாரும் நிர்ப்பந்திக்க முடியாது; அவர்களின் உணவுக் கலாச்சாரத்திற்கு தடை விதிக்க முடியாது” என்று ஜீத்ராய் ஹன்ஸ்தா கூறியிருந்தார்.
இந்த கருத்திற்காகவே, ஜீத்ராய் ஹன்ஸ்தாவை, இந்திய தண்டனைச் சட்டம் 153ஹ (இருதரப்பினருக்கு இடையே தேவையற்ற பதட்டமான சூழலை உருவாக்குதல்) , 295ஹ (மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளை புண்படுத்தும் படி பேசுதல்), மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து ஜார்க்கண்ட் காவல்துறை கைது செய்துள்ளது.
இவ்வழக்கில் ஜீத்ராய் ஹன்ஸ்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை, ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்துவிட்டது. “ஹன்ஸ்தா, அவருடைய உணவு பழக்கவழக்கங்களையே குறிப்பிட்டார்” என்றும், “அவருடைய கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என்றும் ஹன்ஸ்தாவின் வழக்கறிஞர் வாதாடியதை, நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.