tamilnadu

img

கொத்தடிமையாக சிக்கித் தவிக்கும் பழங்குடியின குடும்பம்! பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

கொத்தடிமையாக சிக்கித் தவிக்கும் பழங்குடியின குடும்பம்!  பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

திருவண்ணாமலை,மே 14- ஆரணி அருகே மர கரி சூளை உரிமையாளரிடம் கொத்தடிமையாக சிக்கித் தவிக்கும் பழங்குடியின குடும்பத்திற்கு பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் . அதன் விவரம் வருமாறு:  கடந்த  2021 ஆம் ஆண்டு ஆகாரம் கிராமத்தை சார்ந்த மர கரி சூளை வியாபாரி முத்துராமன் என்பவரிடம் சங்கர் குடும்பத்தினர் ரூ.20 ஆயிரம் முன் பணம் வாங்கிக் கொண்டு  வேலைக்கு சென்றுள்ளனர்.  முத்துராமனுக்கு சொந்தமான இடத்தில் தங்கி வேலை செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக சங்கர், மனைவி,மகன்  மூவரும் பகல் முழுவதும் மரம் வெட்டினால் கூலியாக ரூ.600 கொடுத்துள்ளார். இந்த கூலி பணத்தில், முன் பண தவணை தொகையை கழித்துக் கொண்டுள்ளார். சங்கரின் மூத்த மகள் துர்கா, குடும்ப தேவைக்காக முத்துராமனிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ.55 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு அத்தாட்சியாக சங்கரும் அவரது மனைவியும் பாண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர் . கடனாக பெற்ற பணத்தை 2025 ஆம் ஆண்டு ஜனவரியில்  வட்டியுடன் திருப்பி கொடுத்துள்ளனர். நாள் முழுவதும் குடும்பமே வேலை செய்தாலும் கூலி குறைவாக கொடுப்பது,  சட்டத்திற்கு புறம்பாக  ஏரியில் உள்ள மரங்களை  வெட்ட சொல்லுவது போன்ற காரணங்களால் அங்கு வேலை செய்ய விருப்பம் இல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த முத்துராமன், என்னிடம் இங்கு வேலை செய்யாமல் வேறு எங்கு சென்றாலும் உங்களை விடமாட்டேன், கொன்று விடுவேன் என்ற ரீதியில் மிரட்டியுள்ளார்.  மேலும் சங்கரின் வீட்டு பட்டாவை முத்துராமன் வாங்கி கொண்டுள்ளார்.  சங்கரின் குழந்தைகளை முத்துராமனுக்கு சொந்தமான ஆகாரம் கிராமத்தில் உள்ள கோழி பண்ணையில் அடைத்து வைத்து வேலை வாங்கியுள்ளார். இந்த கொடுமைகளை தாங்காமல், பழங்குடியினர் சங்க  தலைவர்களுடன் கடந்த 6 ஆம் தேதி  ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்து,  சங்கரின்  பிள்ளைகளையும், வீட்டு பட்டாவையும் மீட்டு கொடுத்துள்ளனர். ஆனாலும், சங்கர் குடும்பத்தினர் முத்துராமலிங்கத்திடம் கடன் பெற்ற போது அத்தாட்சியாக கையெழுத்திட்ட பாண்டு பத்திரத்தை திருப்பித் தராமல் வைத்திருந்த தற்போது அந்த பத்திரத்தை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, அந்த குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், செயற்குழு உறுப்பினர்கள் எம் .வீரபத்திரன், எஸ். ராமதாஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ச.குமரன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டப் பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.