tamilnadu

img

புதிய கல்வி கொள்கை குறித்த ரகசிய கருத்து கேட்பு கூட்டம்

கோவை:
புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் பள்ளி கல்வித்துறை சார்பில் கோவையில் ரகசியமாக நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்து அதிகாரிகள் ஓட்டம் எடுத்தனர்.
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து கோவை மண்டல அளவிலான கருத்து கேட்புக் கூட்டம்  புதனன்று நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மண்டல அளவில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் பழனிச்சாமி, இணை இயக்குநர் பொன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஐந்து மாணவர்கள், மூன்று பெற்றோர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டோர் மட்டும் வரவழைக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் புதிய கல்வி கொள்கை குறித்து அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம்  விளக்கினர். முன்னதாக, இந்த கூட்டம் குறித்து கல்வி சார்ந்து இயங்குபவர்களுக்கு மட்டுமல்ல, செய்தியாளர்களுக்குகூட தெரிந்துவிடக்கூடாது என ரகசியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது. புதிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் நபர்களுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டிருந்த்து பின்னர் தெரியவந்தது. இதனையறிந்த தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மதிமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஈஸ்வரன், மாணவர் நல பெற்றோர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்விடத்திற்கு வந்தனர். 

இதன்பின், புதிய கல்வி கொள்கையில்  மாற்று கருத்துடையவர்கள் யாரும் அழைக்கப்படாமல் தனியார் கல்லூரியில் ரகசியமாக இந்த  கூட்டம்  நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியும், கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து ஏன் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த கூட்டத்தை கருத்து கேட்புக் கூட்டம் என ஏற்றுக்கொள்ள கூடாது என  வலியுறுத்திய அவர்கள், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ளும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இக்கூட்டத்தை ரத்து செய்வதாக ஊடகங்களிடம் அறிவிக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கல்லூரி வாயிலில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், மாணவர் நல பெற்றோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு அமர்ந்து கேள்வி எழுப்பினர். இவ்வாறு எதிர்ப்பு அதிகரிப்பதையறிந்த அதிகாரிகள் பாதியிலேயே கூட்டத்தை நிறுத்தினர். மேலும் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர். இதனைத்தொடர்ந்து கூட்டத்தை ரத்து செய்ய அதிகாரிகளின் ஒப்புதலை பெறுகிறோம் என்று கூறிக்கொண்டு அனைவரும் சத்தமில்லாமல் ஓட்டம் எடுத்தனர்.