கேரள மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட - கேரள மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியல் பண்பாட்டை மேலும் மேலும் முற்போக்குப் பாதையில் வளர்த் தெடுத்துச் செல்கிற ஒரு மாபெரும் ஆயுதமாக திகழ்ந்து கொண்டிருக்கிற தேசாபிமானி நாளிதழின் கோயம்புத்தூர் செய்திப்பிரிவு ஜூலை 14 அன்று துவக்கப்பட்டிருப்பதை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தேசாபிமானி கோயம்புத்தூர் செய்திப்பிரிவு, அந்த ஏட்டின் இதர பதிப்புகளை போலவே மாபெரும் வெற்றிப் பாதையில் நடைபோடவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகைகளின் தலையாய கடமை
மக்களிடையே இடதுசாரி அரசியலை, இடதுசாரி சித்தாந்த நிலைப்பாடுகளை கொண்டு செல்வதும், இந்திய நாட்டை இன்றைக்கு பீடித்துள்ள மதவெறி ஆட்சிக்கு எதிராக மதச்சார்பின்மை மாண்புகளையும் ஜனநாயக விழுமியங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதும், தேசாபிமானி போன்ற இடதுசாரி ஏடுகள், பத்திரிகைகளின் தலையாய கடமையாக இருக்கிறது.
மக்களவைத் தேர்தல் படிப்பினை
17 ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று மிகப் பெரிய பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. மதத்தை அரசியலாக்கி, அர சியலை மதவெறிமயமாக்கி சமூகத்தின் ஒரு பகுதியை இதன் மூலமாக தன்வயப்படுத்தும் ரசவாதத்தை நிகழ்த்தியே பாஜக இப்படிப்பட்ட வெற்றியை பெற்றிருக்கிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பி, இந்து, இந்துத்துவா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் என்பது போன்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தியே இத்தகைய வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது. ஆனால் அதே வேளையில் சுமார் 63 சதவீத மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவும் அக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த அதிமுகவும் அதன் கூட்டணியும் படுதோல்வியை அடைந்துள்ளன. தமிழகம், புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்ல, பல தொகுதிகளில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும், 4 லட்சத்திற்கும் அதிகமாக 4 தொகுதிகளிலும் 3 லட்சத்திற்கும் அதிகமாக 8 தொகுதிகளிலும், 2 லட்சத்திற்கும் அதிகமாக 9 தொகுதிகளிலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக 11 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் ஒரு பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டு காலம் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியின் ஆட்சி, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட பொருளாதார தாக்குதல்களை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது; விவசாயிகளின் துயரம் உச்சத்தை எட்டியது; தமிழகத்தை வஞ்சிக்கும் ஏராளமான திட்டங்கள் - ஹைட்ரோ கார்பன் உள்பட - அறிவிக்கப்பட்டன; எதிர்த்து கேட்ட மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இந்த கொடுமைகளையெல்லாம் எதிர்த்து தமிழக மக்கள் வீறுகொண்டு எழுந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தலைவாரித்தாடும் ஊழல் - முறைகேடுகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், 8 வழிச்சாலை மற்றும் மோடி அரசின் தமிழக விரோத நடவடிக்கை களை தட்டிக்கேட்க திராணியில்லாமல் மத்திய அரசின் கைப்பாவையாக எடப்பாடி அரசு மாறிய நிலைமை போன்றவை மக்களின் கோபத்தை பலமடங்கு அதிகரித்தது. அந்த எழுச்சியின் விளைவாக இரண்டாண்டு காலம் எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. அந்த போராட்டங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் முன்னின்றன; அரசியல் இயக்கங்கள், வர்க்க, வெகுஜன இயக்கங்கள் மட்டு மின்றி, தமிழக நலனுக்கு எதிரான மோடி அரசின் கொள்கைகளையும், அதிமுக ஆட்சியின் அலங் கோலங்களையும் விமர்சிப்பதிலும், மக்களிடையே அம்பலப்படுத்துவதிலும் பல்வேறு பத்திரிகைகள், ஊடகங்கள் முன்னின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவின் பங்கு
இவை அனைத்தும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான தமிழக மக்களின் கோபாவேச அலையை கூர்மைப்படுத்தின. இந்தப் போராட்டங்களை ஒன்று பட்டு, ஒரே அணியாக மகத்தான ஒற்றுமையை கட்டி தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றது. அத்தகைய நம்பிக்கையை உருவாக்குவதிலும், தோழமை கட்சிகளின் ஒற்றுமையையும் , போராட்ட பலத்தையும் வலுப்படுத்துவதிலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்த தாக அமைந்தது. அந்த நம்பிக்கையின் வெளிப் பாடாகவே தமிழக தேர்தல் முடிவு அமைந்தது. இது நாடு முழுவதற்குமே ஒரு படிப்பினை என்று சொன்னால் மிகையல்ல.
இடதுசாரிகளின் பங்கு
இந்த தேர்தலில் தமிழகத்திலிருந்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நான்கு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகளுக்கு இத்தேர்தலில் ஒரு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், தமிழகத்தில் மக்கள் இயக்கங்களில் மலர்ந்த தோழர்கள் மக்களவைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதிநிதிகளாக சென்றிருக்கிறார்கள். அவர்கள் நாடு முழுவதும் உள்ள மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் உறுதியாக குரல் எழுப்புவார்கள். பல்வேறு மாநிலங்களில் பாஜக முன்னிறுத்திய குறுகிய - போர்வெறி உணர்வுடன் கூடிய மதவாத தேசிய வெறி இந்த தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் பான்மை பலத்தை அளித்திருந்தாலும், மோடி ஆட்சி யால் அடுத்த ஐந்தாண்டு காலமும் மக்களின் வாழ்வா தாரங்களை பாதுகாக்க முடியாது என்பதே உண்மை. மாறாக, மோடி ஆட்சியில் ஏற்கெனவே பலன் பெற்ற அவர்களது கூட்டுக் களவாணிகளான அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்டுகளே மேலும் மேலும் லாபத்தை குவிக்கப் போகிறார்கள். ஒட்டு மொத்த இந்திய மக்களின் நலன்களையும், வளங் களையும் சுரண்டி கொழுக்கப் போகிறார்கள். இது மோடி 2 அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அப்பட்ட மாக வெளிப்பட்டிருக்கிறது. பொருளாதார தளத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்துத்துவா மதவெறி தாண்டவமும், சிறுபான்மை மற்றும் தலித், பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்களும் இன்னும் தீவிரமாக கட்ட விழ்த்துவிடப்பட்டுள்ளன. மோடி அரசு பதவியேற்ற உடனே ஒரே நாடு, ஒரே தேர்தல், புதிய தேசிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பு, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு உள்ளிட்ட அராஜக அறிவிப்புகளை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக மிகப் பெரும் போராட்டங்கள் வரும் நாட்களில் இந்திய தேசத்தை குலுக்க உள்ளன. மதவெறி பாசிச எதேச்சதிகார ஆட்சிக்கும், ஜன நாயகத்திற்கும் இடையிலான மிகப் பிரம்மாண்ட மான போராட்டத்திற்குள் ஒட்டுமொத்த இந்திய தேசமும் இறங்கி இருக்கிறது. இந்த பின்னணியில் மக்கள் நலன்காக்க, அவர்களது குரலை ஓங்கி ஒலிக்க, குறிப்பாக - தேர்தலில் அதிக இடங்களை பெறவில்லை என்ற போதிலும் - மக்கள் மன்றத்தில் லட்சோப லட்சம் மக்களை எண்ணற்ற இயக்கங்களில் அணிதிரட்டி ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் தேச பக்த போராட்டத்தின் கூர்முனை யாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் கொள்கை பதாகையை மக்களிடையே எடுத்துச் செல்லவும், மக்கள் ஆதரவு ஊடகங்கள் மிக முக்கிய பங்காற்ற வேண்டிய தருணம் இது. இத்தகைய தருணத்தில், கேரளத்தில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற தேசாபிமானி நாளிதழ், தமி ழகத்தில் முதன்மையான தொழில் நகரமாம் - தென் னிந்தியாவின் மான்செஸ்டராம் கோயம்புத்தூரில் தனது புதிய செய்திப்பிரிவை துவக்கியிருப்பது, மக்கள் இயக்கங்களுக்கு உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியை தருவதாகும். கோயம்புத்தூர் செய்திப்பிரிவை துவக்கியுள்ள தேசாபிமானி ஏடு அனைத்து வகையிலும் வெற்றி பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு மீண்டும் தனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
கோவை செய்திப் பிரிவு துவக்கத்தையொட்டி வெளியிடப்பட்ட தேசாபிமானி சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள வாழ்த்துச் செய்தியிலிருந்து...