tamilnadu

img

பீகாரில் கேலோ இந்தியா களரி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு

பீகாரில் கேலோ இந்தியா களரி போட்டியில்  பதக்கம் வென்ற வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு

திருப்பூர், மே 17 - பீகார் மாநிலம் கயாவில் நடைபெற்ற கேலோ இந்தியா களரிப் போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் வென்றது. வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய களரி போட்டி அணியினருக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சொந்த ஊரான மடத்துக்குளத்தில் தாரை தப்பட்டை இசை முழங்க களரி வீரர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று மக்கள் பாராட்டினர். பீகார் மாநிலம் கயாவில் கடந்த மே 11, 12 .13, ஆகிய மூன்று நாட்கள் கேலோ இந்தியா களரிப் போட்டி நடைபெற்றது. தமிழகம் சார்பில் மடத்துக்குளம் களரி பயிற்சியாளர் வீரமணி ஆசான் தலைமையில் மொத்தம் 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பிரிவில் கெட்டிக்கேறி போட்டியில் ஜெயினிஸ்ரீ மற்றும் கனிஷ்கா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் வீ.சுர்ஜித் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டி முடிந்து ரயிலில் புறப்பட்டு சனியன்று காலை திருப்பூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி,இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் அரவிந்தசாமி, மாவட்டச் செயலாளர் எஸ்.பிரவீன், சந்துரு, முகிலன் உள்ளிட்டோர் இவர்களை வரவேற்றனர். பதக்கம் வென்ற ஜெயினிஸ்ரீ, கனிஷ்கா, வீ.சுர்ஜித் மற்றும் ஆசான் வீரமணி ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர். மடத்துக்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேலு உடனிருந்தார். இதன் பிறகு களரி விளையாட்டுக் குழுவினர் சொந்த ஊரான மடத்துக்குளத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு அப்பகுதி பொது மக்கள் மற்றும் பகத்சிங் சிலம்பக் குழுவினர் திரண்டு வந்து தாரை தப்பட்டை இசை முழக்கத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு ஊர் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்