tamilnadu

img

கரூர் மாவட்டத்தில் வாழை,வெற்றிலை கொடிக்கால்,முருங்கை  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை  :


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி தனது அறிக்கையில் கூறியதாவது, வாழை,வெற்றிலை கொடிக்கால்,முருங்கை  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 1.  வாழை விவசாயிகள் பிரச்சினை

கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குளித்தலை,கிருஷ்ணராயபுரம்,கரூர் தாலுகாக்களிலும் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் வாழை விவசாயம் செய்யப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள் . கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள்  ஊரடங்கு உத்தரவால் விளைந்த வாழைத்தார்களையும், இலைகளையும் வெட்டி அனுப்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இதன் காரணமாக பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

2. வெற்றிலை விவசாயிகள்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்,லாலாபேட்டை,சித்தலவாய் பகுதிகளில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் சுமார் 750 ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ் நிலையில் விளைந்த வெற்றிலையை பறித்து  உள்ளூரிலும்,  வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியவில்லை. இதனால் இவர்களும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இவ்விரு விவசாயிகளும்  அடைந்துள்ள பல கோடி ரூபாய் இழப்புக்கு நிவாரணம்  கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

3.முருங்கை விவசாயம்

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் நூற்றுகணக்கான ஏக்கர்களில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.விளைச்சலான முருங்கை காயை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வராததால் சிறு-குறு விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.இவர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

 ஆகவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்