கோவை:
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேளாண் அறிவியல் தமிழ் மாநாட்டில் சிறந்த கட்டுரையாளராக, தீக்கதிரில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து எழுதி வந்தமைக்காக பேரா.முனைவர். தி. ராஜ்பிரவீனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் இணைந்து நாடளாவிய 5 ஆம் வேளாண் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வெள்ளியன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நேரலையிலும், காணொலி வாயிலாகவும் நடைபெற்றது. இம்மாநாட்டில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க இணை பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீனுக்கு, சிறந்த வேளாண் கட்டுரைகளை எழுதியமைக்கான விருது வழங்கப்பட்டது. தீக்கதிர் நாளிதழில் ‘வேளாண் நிலம், பகுதியில் வெளியான புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கட்டுரைகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலசந்திரன், ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.சுகுமார், வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீ.குமார் ஆகியோர் இணைந்து ராஜ்பிரவீனுக்கு வழங்கினர். மேலும் வேளாண் துறையின் பல்வேறு பிரிவு சாதனையாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.