வலுவான நிலையில் இந்தியா
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொட ரின் முதல் ஆட்டத்தில் (விசாகப்பட்டினம்) இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிராவின் முக்கிய நகரான புனேவில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா (14) சொதப்ப மயாங்க் அகர்வால் - புஜாராவுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை கையிலெடுத்து, இருவரும் அரைச் சதமடித்து அசத்தினர். அரைச் சதமடித்த வேகத்தில் புஜாரா (58) பெவிலியன் திரும்ப, 2-வது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அகர்வால் (108) சதமடித்து அடுத்த சில நிமிடங்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 85.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்தது. கோலி, ரஹானே ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். வெள்ளியன்று துவங்கிய 2-வது நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் கை ஓங்கியது.
சிறப்பாக விளையாடிய கோலி சத மடித்து அசத்த, ரஹானே (59) அரைசத மடித்து மகாராஜ் சுழலில் வீழ்ந்தார். சதமடித்த வுடன் கோலி ரன் குவிப்பில் ஆர்வம் காட்டி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சைப் பிழிந்தெடுத்தார். 6-வது வீரராகக் களமிறங்கிய ஜடேஜாவும் கோலியுடன் சேர்ந்து அதிரடியாக ரன் குவிக்கத் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் செய்வதறி யாது திகைத்தனர். தொடர்ந்து வேகம் காட்டிய கோலி இரட்டை சதமடித்து புதிய சாதனை படைத்தார். கோலிக்கு இது 7-வது இரட்டை சதமாகும். அரைசதமடித்த வேகத்தில் சதத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்த ஜடேஜா 91 ரன்கள் எடுத்திருந்த பொழுது முத்துச்சாமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ஆட்ட மிழந்தவுடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வருவதாக கேப்டன் கோலி அறிவித்து டிக்ளர் செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரபடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்துக்கொண்டி ருந்தது. தொடக்க வீரர்கள் மார்க்கிராம் (0), எல்கரை (6) உமேஷ் யாதவ் அடுத்தடுத்து வெளியேற்ற தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. பிரையூன்(20), ஆன்ட்ரிச் (2) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
டிஆர்எஸ் கேட்கக்கூடாது...
2-வது நாளின் முதல் சீசனில் இருநாட்டு கேப்டன்களையும் அழைத்து உணவு இடைவேளைக்கு முன்பு டிஆர்எஸ் முறை கிடையாது, கேட்கக்கூடாது என கள நடுவர் லாங் சர்ச்சை அறிவிப்பை வெளியிட்டார். ஏன் என்று இருநாட்டு கேப்டன்களும் கேட்கப் பதில் ஏதும் அளிக்காமல் நடுவர் லாங் நடையைக் கட்டினார். ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சனையால் இந்த சிக்கல் உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஆர்எஸ் வரலாற்றில் இப்படி நடப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.