tamilnadu

img

உலக சுற்றுச்சூழல் தினம் உதகை சுற்றுலா பயணிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

மே.பாளையம், ஜூன் 4-உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுபேரணி நடைபெற்றது.ஆண்டு தோறும் ஜூலை 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைசெல்லும் சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி மாணவ, மாணவியர் சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கும் பதாதைகளைக் கைகளில் ஏந்திச் சென்றனர். பின்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீலகிரி செல்லும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிக்கும் சாலையில் நின்ற மாணவ, மாணவிகள், அவ்வழியே கடந்து செல்லும் பேருந்து, கார், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, அதில் பயணிப்போருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். மேலும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் விளக்கிக் கூறினர். சுமார் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2000மரக்கன்றுகள் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. சுற்றுச் சூழல் தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இப்பகுதியில் உள்ள வனம் சார்ந்த சாலையில் நீலகிரி நோக்கி பயணிக்கும் சுற்றுலா பயணிகள் சிலர் சுற்றுச் சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்ளும் நிலையில், அதே சாலையில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது பலரது பாராட்டை பெற்றது.