நாமக்கல், செப்.27- வாக்காளர்கள் தங்களது விபரங்களை வோட்டர் ஹெல்ப்லைன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், செல்வம் கல்விக்குழும வளாக கூட்டரங்கில், வோட்டர் ஹெல்ப்லைன் செயலி மூலம் சரிபார்க்கும் முறை குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெள்ளியன்று விளக்கி கூறினார். அப்போது அவர் பேசுகையில், வாக்காளர் பட்டியலை செம்மைப் படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது . இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் வோட்டர் ஹெல்ப்லைன் என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த செயலியை வாக்காளர்கள் தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து விபரங்கள் சரியாக உள்ளதா என பார்வையிடலாம். மேலும் ஏதேனும் விபரங்கள் தவறாக இருந்தால் தாங்களே திருத்தங்களை மேற்கொள்ளலாம். வாக்காளர்கள் தாங்களே விபரங்களை சரி பார்த்து திருத்தம் மேற்கொள்வதால் பிழையில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்க மிகவும் உதவியாக இருக்கும். மேலும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை வோட்டர் ஹெல்ப்லைன் செயலியை பயன்படுத்தியும் தேர்தல் ஆணையத்தின் www.nvsp.in என்ற இணைய தளத்தின் வாயிலாகவும் தங்களது விபரங்களை சரி பார்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் நாமக்கல் வட்டாட்சியர் பச்சை முத்து உட்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.