tamilnadu

திருப்பூர் , அவிநாசி முக்கிய செய்திகள்

திருக்குமரன் நகரில் அடிப்படை  வசதி கோரி மாநகராட்சியில் மனு

திருப்பூர், ஜூலை 4 - திருப்பூர் மாநகராட்சி 52ஆவது வார்டுக்கு உட்பட்ட  திருக்குமரன் நகர், அமராவதி நகர் பகுதியில் சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறை வேற்றித் தரும்படி மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப் பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: சாக்கடை வசதி இல்லாத தால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி இருக்கின்றன.  சாலைகளும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனில்லாத நிலையில் உள்ளன. திருக்குமரன் நகர் அரசுப்  பள்ளி அருகில் குப்பைகள் தேங்கியுள்ளன. அவற்றை அகற்றுவதற்கு உரிய குப்பைத் தொட்டிகளும் இல்லை. இதனால் பொது மக்கள் பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. தெருவிளக்குகள் சரியாக எரியாத தால் இரவு நேரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப் பகுதியில் சாலை அமைக்கவும், சாக்கடை, குப்பை அகற்றம்  உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்குமரன் நகர் கிளை சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் புதனன்று மனு அளிக்கப்பட்டது.

அவிநாசி பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி இழுத்தடிப்பு

பொதுமக்கள் குற்றச்சாட்டு

அவிநாசி, ஜூலை 4- அவிநாசி பகுதியில் வருவாய்த்துறையினர் நில அளவீடு  செய்வதை இழுத்தடிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அவிநாசி தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையில் உள்ள நில அளவையாளர் அலுவலகம் செயல்பட்டு வரு கிறது. அவிநாசி முழுவதும் உள்ள காலி இடங்கள் மற்றும்  விவசாய நிலங்கள் ஆகியவற்றை நில அளவீடு செய் கின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் நிலத்தை அளப் பதற்கு வரும் பொதுமக்களிடம், வங்கியில் (ஸ்டேட் பேங்க்  ஆப் இந்தியா) கட்டணம் செலுத்தி ரசீதை  தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றனர். இந்த ரசீதை பெற்றுக் கொண்டு நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்வார்கள். ஆனால் ரசீதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பொது மக்களிடம்  கைபேசி மூலம் அழைப்பதாக கூறி அனுப்பி விடுகின்றனர். ஆனால் கைபேசி மூலம் அழைப்பதும், நிலத்தை அளவீடு செய்ய வருவதும் இல்லை. இதுகுறித்து தெக்கலூர் ஊராட்சி செங்காளி பாளையத்தை சேர்ந்த செல்லப்பகவுண்டர் மகன் கருப்பு சாமி கூறுகையில்,   தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை  அளப்பதற்கு  2 வருடமாக வங்கியில் பணம் செலுத்தி ரசீதை நில அளவையாளர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தேன். ஆனால் அதிகாரிகள் வருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வருவதில்லை. இதனால் மிகவும் மன உளைச்சல் அடைந்து விட்டேன். மீண்டும் 24.6.2019 அன்று வங்கியில்  ரூ.200 கட்டணம் செலுத்தி ரசீதை நில அளவையாளரிடம் ஒப்படைத்தேன்.  மறுபடியும் வழக்கமான பதிலேயே கூறி  அனுப்பிவிட்டனர். ஆனால் நில அளவையர்களுக்கு தனியாக கவனித்தால் மட்டுமே உடனடியாக அளவீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.    இதுகுறித்து அறிவதற்கு செய்தியாளர் அதிகாரியின் கைபேசிக்கு அழைத்தார். ஆனால் கைபேசி அழைப்பை அதிகாரி துண்டித்து விட்டார்.  இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து நில அளவீட்டை முறைப்படுத்த வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.