விஷவாயு சாயசலவை ஆலைக்கு சீல்
திருப்பூர், ஏப். 16 -திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாயக்கழிவுத் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி நான்கு இளம் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சாயசலவை ஆலைக்கு திங்களன்று வட்டாட்சியர் சீல் வைத்தார்.கடந்த ஞாயிறன்று அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் ஜெயக்குமார் என்பவருக்குச் சொந்தமான சாயசலவை ஆலையின் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக, போதிய உபகரணங்கள், கருவிகள் இல்லாமல் உள்ளே இறங்க முயன்றனர். அப்போது விஷ வாயு தாக்கி ஒருவர் பின் ஒருவராக நான்கு பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் நேரில் அங்கு வந்து ஆய்வு செய்தார். இந்நிலையில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கிய சாயசலவை ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்பேரில் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திங்களன்று இந்த ஆலைக்குச் சீல் வைத்தனர். மேலும் ஆலையின் மின் இணைப்பையும் துண்டித்தனர்.முன்னதாக சாய ஆலைக்குச் சென்றபோது முன்பகுதி கதவு பூட்டப்பட்டிருந்தது. சாவி இல்லாததால் பூட்டை உடைத்து அலுவலர்கள் உள்ளே சென்று ஆலைக்குச் சீல் வைத்தனர்.
மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
திருப்பூர், ஏப்.16-நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் ஏப்ரல் 17முதல் 18 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவைகள் முழு நேரமும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது. தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.