tamilnadu

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் குடிக்கத் தண்ணீர் இல்லை

திருப்பூர், மே 31-திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை வந்த பொது மக்கள் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர்.திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியரகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் ஏழு தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் பொது மக்கள் மற்றும் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் தேவைக்காக கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் வியாழனன்று பல்வேறு பணிகளுக்காக ஆட்சியரகத்துக்கு வந்தவர்களுக்கு குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. தரைத்தளத்தில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் ஏறிச் சென்று அங்கிருந்த குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்களில் பார்த்தபோதும் குடிநீர் இல்லை. அத்துடன் அந்த வளாகத்தில் உள்ள தேநீர்க்கடைகளிலும் குடிநீர் பாட்டில்கள் விற்பனைசெய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கும் குடிநீர் கிடைக்கவில்லை.இதனால் கொளுத்தும் வெயிலில் ஆட்சியரகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்தவர்கள் தாகத்தில் மிகவும் சோர்ந்து போய் தவித்தனர். சிலர் நேரடியாகவே அங்கிருந்த அலுவலர்களிடம் குடிநீர் இல்லாதது குறித்து கேட்டபோது தனிப்பட்ட முறையில் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீர் குவளைகளைக் கொடுத்து தாகம் தீர்த்தனர். அதேசமயம் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் ஆட்சியரகத்தில் குடிநீர் கூடஇல்லாத அவலநிலை பொதுமக்களை முகம்சுழிக்கவைத்தது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது ஆட்சியரககுடிநீர் தொட்டி ஒன்றில் பறவைஇறந்து கிடந்ததால் அந்த தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக அனைத்து தளங்களுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.இது போன்ற பணிகள் நடைபெறும் நிலையில் பொது மக்கள்பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கையாக மாற்று ஏற்பாடு செய்து வைத்திருக்கவேண்டும். ஆனால் பொது மக்களைப் பற்றிகவலைப்படாமல் நிர்வாகம் செயல்படுவது ஏமாற்றம் அளிப்பதாக அங்கு வந்தவர்கள் கூறினர். அத்துடன் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகப் பணியை விரைந்து முடித்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்என்றும் வலியுறுத்தினர். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை என்றால் இங்கு வந்து முறையிடுவோம், இங்கும் குடிநீர் பிரச்சனைஎன்றால் எங்கே முறையிடுவது என்றும் கேள்வி எழுப்பினர்.-(ந.நி)